Saturday, December 26, 2020

நூல் அறிமுகம் - மணல் பூத்த காடு - முஹம்மது யூசுஃப்

#வாசிப்பு2020

17/2020

மணல் பூத்த காடு - முஹம்மது யூசுஃப்

பயணம் மனித நாகரிகத்தின் வளர்ச்சியையும், அறிவையும் விரிவாக்கியது...தேவைகளின் நிமித்தமாகவும், நிலங்களின் பண்புகளை அறியவும் மனிதன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணப்படுகிறான்...அவன் பயணப்பட்டிருக்கவில்லை என்றால் இந்த அளவிற்கு நாகரிக வளர்ச்சியும், வாழ்வியல் மாற்றங்களும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாது போயிருக்கும்! 

ஒவ்வொரு பயணமும் நாம் சென்று காண்கின்ற இடங்களும் நமக்குள் இருக்கும் குழந்தைமையை வெளிக் கொண்டு வருபவை! பயணிப்பதைப் போலவே பயணித்து வந்தவர்களின் அனுபவப் பகிர்வும் மிகவும் சுவாரஸ்யமாணது...அதைப் போன்ற ஒரு வாழ்வனுபவம் தான் இந்த மணல் பூத்த காடு புதினம்!

தூத்துக்குடியிலிருந்து அரபு தேசமான சவூதி அரேபியாவின் ரியாத் நோக்கி வேலைக்காக பயணப்படும் அனீஸ் தான் கதையின் நாயகன்...பயணித்தது அனீஸ் என்றாலும் நாமும் அந்த பறத்தலின் ஊடாக ஒன்றிணைந்து விடுகிறோம்! 

அரேபிய தேசம் என்றாலே நம்முடைய நினைவிற்கு வருவது வரண்ட பாலைவனமும், அந்நாட்டவர்களின் மேல் நமக்கு பதிந்திருக்கும் எதிர்மறை சிந்தனைகளும் தான்...ஆனால், இந்த புதினத்தில் சவுதியின் இன்னொரு அற்புதமான முகத்தையும், அவர் வடக்கும், தெற்கும், கிழக்கும், மேற்குமாக ஓடி ஓடி தான் ரசித்த ஒவ்வொரு இடங்களையும் தன் எழுத்துக்கள் மூலமாக வாசிப்பவர்களுக்குள் கடத்தியிருக்கிறார் அண்ணன் முஹம்மது யூசுஃப்! இதில் ஒரு கருவி மட்டுமே அனீஸ் கதாப்பாத்திரம்...

ஒவ்வொரு நாட்டிற்கும் அதனுடைய கலை, பண்பாடு, கலாச்சாரத்தின் அடிநாதம் இருக்கும் அது பயணிப்பவனின் கண்களுக்கு தன்னுடைய தரிசனத்தையும் மாண்புகளையும் திறந்து காட்டுகிறது...
ஊரில் இருந்த கடன் காரணமாக ரியாத்திற்கு பயோமெடிக்கல் எஞ்சினியர் வேலைக்கு வரும் அனீஸிற்கு அந்த நிலப்பரப்பின் குறுக்கும் நெடுக்கும் சென்று வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது...அவன் செல்லும் ஒவ்வொரு ஊரின் அருகில் இருக்கும் வரலாற்றுச் சின்னங்களையும், சிறப்பு வாய்ந்த ஊர்களையும் சுற்றிப் பார்க்கிறான்...

ஒரு பக்கம் அயல் வாழ்க்கை நிறைய பயணங்களையும் அனுபவங்களையும் தந்தாலும்...தனிமை உணர்வை போக்குபவர்கள் உடன் இருப்பவர்கள் தான் இல்லையா...அனீஸின் அறையில் உடன் தங்கியிருக்கும் இப்ராஹிம் பாய் மூலமாக அனீஸிற்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள்...அதில் முக்கியமாக ஷேக் பாய் வீட்டில் இருக்கும் ரவி, துடுக்காக பேசும் ராஜா, ஹாருன் என ஒரு நண்பர்கள் பட்டாளம் அமைகிறது...

இன்னொரு பக்கம் தோழப்பா, சரவணன் சார் என நல்ல அனுபவம் மிக்க, நல்ல மனிதர்களை சம்பாதிக்கிறான் அனீஸ்! சவுதி மண்ணின் வராலாற்றை தோழப்பா மூலம் அறிந்து கொள்ள முடிகிறது! பிரிட்டனும் பிற மேற்குலக நாடுகளும் சவுதியின் மீது தன்னுடைய ஆதிக்கத்தை எப்படி எல்லாம் நிலைநிறுத்த வேலைகளை செய்கின்றன...அதில் வஹாபிசத்தின் பங்குகள் என்ன என்பதை எல்லாம் ஒரு நல்ல ஆசிரியரின் பொறுமையோடு தோழப்பா எடுத்து கூறுகிறார்! 

முன்னுரையில் ஆசிரியர் கூறியது போல "இந்த எழுத்தை வாசித்து விட்டு சவூதி அரேபியாவுக்குச் செல்லும் வாய்ப்பை வேண்டாம் என மறுத்த, அந்த நாட்டைப் பற்றிய தவறான கருத்தை மனதில் வைத்திருந்த ஒருவன் அங்கு செல்லத் தயாரானால் நான் இதை எழுதியதன் பயன் அடைந்து விட்டதாய் கருவேன்." ஆம் நிச்சயம் நீங்கள் எழுதியதின் பயனை இந்த படைப்பு அடைந்து விட்டது! இனியும் இந்த படைப்பு நிறைய பேருக்கு சவூதியின் மேலான கண்ணோட்டத்தை மாற்றும் தகவல் களஞ்சியமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை! :)

பதிப்பகம் - யாவரும் பதிப்பகம்
பக்கங்கள் - 448
விலை - 500

Wednesday, December 2, 2020

நூல் அறிமுகம் - நஞ்சுண்ட காடு - குணா கவியழகன்

#வாசிப்பு2020

16/2020

நஞ்சுண்ட காடு - குணா கவியழகன்

இலங்கையில் 80 களில் நடந்த போரில் பங்கேற்ப்பதற்காக பயிற்சி பெற்ற இளம் பதின் வயது போராளிகளின் வாழ்வியலை விளக்குகிறது நஞ்சுண்டகாடு...அவர்களின் நஞ்சுண்டகாடு பயிற்சி முகாமில் நடக்கும் விசயங்களையும், இனியவன் மற்றும் சுகுமாறன் என்கிற இரண்டு போராளிகளுக்கு இடையில் ஏற்ப்படும் நட்பை முன்வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் குணா கவியழகன்...


பயிற்சி முகாமில் நடக்கும் சிறு சிறு சச்சரவுகள் அதற்காக அவர்களுக்கு அளிக்கப்படும் பனிஷ்மெண்ட்டுகள் என கதை போனாலும்...அங்கிருக்கும் போராளிகளின் இடையே இருந்த ஒற்றுமையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், சிறு சிறு பகடியான தருணங்களும் இல்லாமல் இல்லை...

அவர்கள் அனைவரும் பயிற்சி முடிந்து போர்களத்திற்கு போகும் போது வாசிக்கும் நமக்கும் அந்த பிரிவுணர்வு ஏற்ப்படுகிறது...அதன் பிறகாக நடக்கும் இனியவன், சுகுமாறன் சந்திப்புகளும்...சுகுமாறனின் குடும்ப நிலைமை போரின் குரூரத்தால் தாக்கப்பட்டு மிகவும் பரிதாபமான நிலையை அடைந்து துன்புருவதை சுகுமாறனின் அக்கா சொல்லும் போது  மனித வாழ்வின் துன்பியல் சக்கரம் இப்படி எல்லாம் ஒரு குடும்பத்தை அடிக்குமா என்கிற வேதனை எழுந்து ஒரு துளி கண்ணீர் துளிர்க்கிறது...அந்த இடத்தில் குணா அவரின் உணர்வுகளை வாசிப்பவரிடம் கடத்தி விடுகிறார்...

தமிழீழ போரில் பங்கேற்ற போராளிகளின் வாழ்வியலை அறிய விரும்புகிறவர்கள் இந்த புத்தகத்தை வாசிக்கலாம்...

பதிப்பகம் - கிண்டில் பதிப்பு
விலை - 99

Sunday, November 29, 2020

நூல் அறிமுகம் - விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

வாசிப்பு2020

15/2020

விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

இந்த புத்தகத்தை ரொம்ப ஆசையாய் வாங்கி வைத்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது... இந்த இரண்டு வருடத்தில் இரண்டு முறை வாசிக்க எடுத்து முதல்முறை நான்கு பதிப்புகளின் முன்னுரையை மட்டும் வாசித்து வைத்து விட்டேன்...இரண்டாம் முறை முதல் பகுதியில் இரண்டு அத்தியாயங்களுடன் நிறுத்திவிட்டேன்...


இந்த முறை விடக்கூடாது எப்படியாவது முடித்துவிட வேண்டும் என சபதம் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்...சுமார் 3 மாதங்கள் எடுத்துக் கொண்டேன் விஷ்ணுபுரத்தை வாசித்து முடிக்க...
வசந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரத்தின் கதையை சபையோர் முன்னிலையில் கூறுகிறான்...அந்த கதை சொல்லலில் விரிவான சொற்களால் கட்டமைக்கப்பட்ட நகரமே விஷ்ணுபுரம்...

இந்த நாவல் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது...

1. ஸ்ரீபாதம் 
2. கௌஸ்தூபம்
3. மணிமுடி

1. ஸ்ரீபாதம் : 

முதல் பகுதியான ஸ்ரீபாதத்தில், சோனா நதிக்கரையில், ஹரிததுங்காவின் சிகரங்களின் நிழலில் எழுந்து நிற்கும் விஷ்ணுபுர நகரத்தின் அதி அற்புதமான தோற்றமும், கோயிலின் பிரம்மாண்டமான வடிவத்தையும் நம்மால் காட்சிப்படுத்திக் கொள்ள முடிகிறது! விஷ்ணுபுர கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்ப்பங்களின் அழகையும், திருவிழாவிற்காக மக்கள் அலை அலையாக திரண்டு வரும் காட்சிகளையும் மிகவும் அழகாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்...ஒரு நாவலில் இத்தனை கதை மாந்தர்களா என வியக்கும் அளவிற்கு அவ்வளவு பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வது கொஞ்சம் சிரமமாக இருந்தது...கதையின் ஓட்டத்தில் அந்த சிரமம் நீங்கி விடுகிறது...எல்லா கதாபாத்திரங்களின் அறிமுகமும் இந்த பகுதியில் தான் நடக்கிறது...இந்த பகுதி மிகவும் வேகமாகவும் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமலும் வாசித்து முடிக்க முடிகிறது...

2. கௌஸ்தூபம்:

நாவலின் இரண்டாம் பகுதியான கௌஸ்தூபத்தில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருப்பது விஷ்ணுபுர ஞான சபையில் நடக்கும் தர்க்க விவாதங்கள் தான்...முதல் பகுதியை எளிமையாக வாசித்து முடித்திருந்தேன்...ஆனால் இந்த பகுதியில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த எத்தனையோ ஞானமரபுகளின் குருமார்கள் எல்லோரும் சேர்ந்து சர்ச்சை செய்து கொள்வதாக அமைத்திருக்கிறார் ஜெயமோகன்...இந்த ஞானசபையின் முடிவில் தான் விஷ்ணுபுரத்தின் அடுத்த தலைமைப் பீடத்தை வெற்றி கொள்ளப் போகும் ஞான மரபைத் தேர்ந்தடுப்பார்கள்...தர்க்கங்களில் பேசப்பட்ட சொல் பிரயோகங்கள் அரைகுறையாக தான் புரிந்த்து, அதனால் ஒரு நாளைக்கு 10 பக்கங்களைத் தாண்டி வாசிப்பது மிகவும் சிரமமாக இருந்தது...ஒரு நாவலுக்குள் இவ்வளவு தர்கங்களும், வாசகனைக் குழப்பும் விவாதங்களும் தேவை தானா என்கிற எண்ணம் எழாமல் இல்லை.

இந்த ஞானசபையின் முடிவில் நடக்கும் கிருஷ்ணபட்சி பரீட்சையில் வெற்றி பெற்று பௌத்த பிக்குவான அஜிதர் அடுத்த தலைமை ஸ்தானத்தை அடைகிறார்...அஜிதரின் வாதப் பிரதிவாதங்கள் அங்கே இருந்த வேதாந்திகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் பிடிக்கவில்லை...அதனால் பல சதியாலோசனைகளையும் செய்கிறார்கள், அவை அனைத்தையும் முறியடித்து பௌத்தம் விஷ்ணுபுரத்தின் தலைமை பீடத்தை அலங்கரிக்கிறது! 

3. மணிமுடி :

மகா அஜிதரின் ஆட்சியின் கீழ் விஷ்ணுபுரம் பௌத்தத்தின் ஒரு தலைநகராக விளங்குகிறது...அஜிதருக்கு முன்னர் பவதத்தரின் காலத்தில் வைணவ தலமாக இருக்கிறது...இந்த மூன்றாவது பகுதியான மணிமுடியில் விஷ்ணுபுரம் ஒரு சிதிலமடைந்த நகரமாக காட்சியளிக்கிறது...இந்த பகுதியில் தான் நகரம் பிரளையத்தில் மூழ்கி அழிகிறது...மணிமுடி பகுதியில் இங்கே குடியிருக்கும் பூர்வக் குடிகளான செம்பர் குல மக்களின் பெருமூப்பனின் சிலை தான் கருவறைக்குள் இருக்கும் விஷ்ணுவின் சிலை உருவகப்படுத்தப்படுகிறது...அவர் புறண்டு படுக்கும் காலம் தான் பிரளய காலமாக கருதப்படுகிறது...

மொத்தத்தில் விஷ்ணுபுரம் கனவில் உருவான ஒரு பிரம்மாண்ட நகரம்... ஜெயமோகன் முன்னுரையில் சொன்னது ஞாபகம் வருகிறது : "விஷ்ணுபுரம் ஒரு கனவு. கனவுகள் வசீகரமானவை. இந்நாவலின் ஈர்ப்புக்குக் காரணம் அதுவே. அதே சமயம் கனவுகளில் முற்றிலும் இனியவை என்று ஏதுமில்லை. கனவுகள் நம்மை நமக்குக் காட்டுபவை. நம்மை நிலைகுலையச் செய்பவை. நாம் நமது தர்க்கபுத்தியால் எத்தனை தூரம் சென்றாலும் எவ்வளவு சுருக்கி வகைப்படுத்தினாலும் அளந்துவிட முடியாதவை."

பிகு. : ஜெயமோகனை புதிதாக வாசிக்க விரும்புகிறவர்கள் இந்த புத்தகத்தை தவிர்த்து வேறு படைப்புகளில் இருந்து ஆரம்பிக்கலாம்...

பதிப்பகம் - கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் - 827
விலை - 800

நூல் அறிமுகம் - தோழர் சோழன் - எஸ்.எஸ். சிவசங்கர்

#வாசிப்பு2020

14/2020

தோழர் சோழன் - எஸ்.எஸ்.சிவசங்கர்

1987ஆம் ஆண்டு வாக்கில் ஆண்டிமடம், அரியலூர், ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த நக்சல் போராட்டக் குழுவின் நடவடிக்கைகளை வைத்து எழுதப்பட்ட புத்தகம் தோழர் சோழன்...உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அந்தந்த சம்பவங்களின் பத்திரிகை குறிப்புகளோடு கொடுத்திருக்கிறார்...

தனித் தமிழ்நாடு கோரிக்கைக்காக அரசின் கவனத்தை பெறுவதற்கு தோழர் தமிழரசன் தலைமையிலான நக்சல் குழு மருதையாற்று பாலத்தை தகர்ப்பதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது...

பாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட சோழன்...ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இயக்கத்தின் மேடையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்து தன்னை இணைத்துக் கொள்கிறான்...சமூகத்தில் நடக்கும் கொடுமைகள், காவல்துறையில் நடக்கும் அநியாயங்களையும் பார்க்கும் சோழன் கொத்தித்துப் போய் களம் இறங்குகிறான்! 

சிவசங்கர் கட்சி அரசியலில் இருந்தாலும் இயக்க அரசியலில் இருந்த ஒரு அமைப்பைப் பற்றி எழுதியிருப்பது, அரசியல் சார்ந்த இயக்கம் ஆட்சியில் எவ்வளவு தாக்கத்தையும், பிராந்திய ரீதியிலான பிரச்சனைகளை எவ்வாறு கையாள்கிறது என்பதை விரிவாக எழுதியிருக்கிறார்...

நிகழ்ந்த சம்பவங்களை தொகுத்திருந்தாலும் வரலாறு கூறுவது போல வறட்சியாக இல்லாமல், கதை சொல்லலை இலகுவாக செய்திருக்கிறார் ஆசிரியர்! 

பதிப்பகம் - கின்டில் பதிப்பு
பக்கங்கள் - 123
விலை - 50

Saturday, October 3, 2020

நூல் அறிமுகம் - புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

#வாசிப்பு2020

13/2020

புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகில் உள்ள பனைவிளை கிராமத்தில் இருக்கின்ற புத்தம் வீடு தான் கதைக்களம்...அந்த ஊருக்கு பிரதான தொழில் பனை, பனையை வைத்து கள், பதனீர், கருப்பட்டி என விதவிதமான பண்டங்கள் செய்து விற்பது அங்கிருக்கும் பெரும்பான்மையான மக்களின் வாழ்வியல்...


கிராமத்தில் இரண்டு பிரிவு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் ஒரு சாரார் பனை முதலாளிகள், இன்னொரு சாரார் பனையேறி தொழில் பார்க்கும் கூலியாட்கள்...ஊரின் மிகவும் பெருமை வாய்ந்த வீடான புத்தம் வீட்டின் தலைவராக கண்ணப்பச்சி இருக்கிறார் அவருக்கு இரண்டு மகன்கள் அவர்களில் மூத்த மகனின் மகள் லிஸி தான் கதையின் நாயகி...இளைய மகனின் மகள் லில்லி குறும்பும், அழகும் நிறைந்த பெண்...

கதை இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் நடந்தது...அதனால் அந்த காலத்ததின் நிலையை இயல்பாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்! புத்தம் வீடும் அதன் மனிதர்களும் எவ்வாறு சரிவை சந்திக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை இறங்குமுகமாக எப்படி போகிறது என்பதையும் காலத்தின் கட்டாயம் இந்த இரண்டு பெண்களின் வாழ்வை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை ஒரு பெண்ணின் பார்வையில் ஹெப்சிபா அழகாக கதை சொல்லியிருக்கிறார்...

குமரி வட்டார வழக்கும், கடினமில்லாத மொழியும் இயல்பாக கதையில் ஒன்றி வாசிக்க முடிகிறது!

பதிப்பகம் - காலச்சுவடு
பக்கங்கள் - 160
விலை - 190

Sunday, June 14, 2020

நூல் அறிமுகம் - ஹோமோடியஸ் வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)

#வாசிப்பு2020

11/2020

ஹோமோடியஸ் - வருங்காத்தின் சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி - தமிழில் நாகலட்சுமி சண்முகம்

ஹோமோசேப்பியன்கள் ஹோமோடியஸாக (லத்தீன் மொழியில் டியஸ் என்றால் கடவுள்) மாறக் கூடிய காலகட்டமான 21ம் நூற்றாண்டை பற்றிய தன்னுடைய பரந்துபட்ட ஆராச்சியின் கூறுகளை இந்நூல் மூலமாக முடிந்தளவு எளிமையாக்கி கொடுத்திருக்கிறார் இஸ்ரேலிய வரலாற்று அறிஞர் யுவால் நோவா ஹராரி...இவர் ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்...இவரின் முந்தைய நூலான சேப்பியன்ஸ் மனித குலத்தின் சுருக்கமான வரலாறு உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற படைப்பாகும்!

மனிதனின் மூதாதையர்களான நியண்டர்தால், சிம்பன்சிக்களில் இருந்து மனிதனின் பரிணாமம் இப்போது இருக்கும் ஹோமோசேப்பியன்ஸ் என்கிற நிலையை அடைந்திருக்கிறது...இதற்கு அடுத்த வளர்ச்சியாக ஹோமோடியஸ் என கூறக்கூடிய அதிமனிதர்களாக (Super humans) மாறுவதற்கான சாத்தியக் கூறுகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறார்.

ஹராரி வரலாற்று ஆய்வாளராக இருந்தாலும் அவர் இந்த புத்தகத்தில் அறிவியல், தொழிநுட்பம், மருத்துவம், பண்பாடு, கலை என எல்லா விதமான பரிணாமக் கூறுகளைப் பற்றியும் சுறுக்கமாக அதே சமயத்தில் சுலபமான உதாரணங்களுடன் விளக்குகிறார்!

இந்த மாறுதல் காலகட்டங்களின் ஊடாக நடைபெறவிரிக்கும் சமூக, பொருளாதார மாற்றங்களையும், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), படிமுறைத் தீர்வுகள் (Algorithms) மற்றும் Automation ஆகியவற்றால் நடக்கவிருக்கும் வேலையிழப்புகள் பற்றி கூறுகிறார்!


இப்போதிருக்கும் தொழிற்புரட்சி யுகம்  மனித மையமான ஒன்று, இதற்கு முந்தியதான உலகம் கடவுள் கொள்கை மற்றும் பல்வேறு மதப் பிரிவுகளின் ஊடகவும் இருந்து செயல்பட்டு வந்தது. ஆனால் 21ம் நூற்றாண்டு முழுக்க முழுக்க தரவுகளை (Data) மையமாக கொண்டு செயல்படும் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

எதிர்காலத்தில் இணையம் என்பது ஒரு தவிர்க்கமுடியாத மாபெரும் சக்தியாகவும் தரவோட்டத்தின் (Data Flow) அடிநாதமாகவும், மனித உழைப்பை தேவையில்லாத ஒன்றாக மாற்றவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதையும், நிகழ்காலத்தின் உதாரணங்களை வைத்து projection செய்து பார்க்கும் போது பெரும் மலைப்பு ஏற்ப்படுவதை தவிர்க்க முடியவில்லை!

தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் நாகலட்சுமி சண்முகம் அவர்கள், சிறப்பாக செய்திருக்கிறார். ஒரேஒரு சிறிய குறை தான் கலைச் சொற்கள் எல்லாவற்றையும் தமிழப்படுத்தியிருக்கத் தேவையில்லை. இந்த அதீத தமிழ்ப்படுத்துதல் வாசிப்பின் வேகத்தை மட்டுப்படுத்தி விடுகிறது!

மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் நம்முடைய சந்ததிகள் எப்படியான உலகத்தில் வாழப் போகிறார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் நிச்சயம் இந்த நூலை வாசிக்கலாம்!

"மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்த போது வரலாறு தொடங்கியது, மனிதர்களே கடவுளராக மாறும் போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்."

- யுவால் நோவா ஹராரி

பதிப்பகம் - மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
பக்கங்கள் - 504
விலை - ₹499

Friday, June 12, 2020

நூல் அறிமுகம் - ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி

#வாசிப்பு2020

10/2020

ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி

18 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் கொண்ட தொகுப்பு, பழ. அதியமான் தொகுத்திருக்கிறார். கரிசல் நிலத்தின் கதை சொல்லியான அழகிரிசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன் அவர்கள் பிறந்த இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர்.

கரிசல் நிலத்திலிருந்து எழுத வந்திருந்தாலும் ஒருசில கதைகளைத் தவிர மற்றவை எல்லாம் சென்னையின் மைலாப்பூர், திருவல்லிக்கேணி என சென்னையின் அறுபதுகளின் வாழ்நிலை கதைகளில் பிரதிபலிக்கிறது...
கதாபாத்திரங்கள் எல்லோரும் ஏழை மற்றும் நடுத்தர குடுத்து ஆட்களாகவே இருக்கிறார்கள். அநேக கதைகளில் பசி என்பதை மையச் சரடாக பயன்படுத்தியிருக்கிறார் அழகிரிசாமி.  

குடும்ப வாழ்க்கை, மனிதர்களின் மன அவசம், பலவீனங்கள், குழந்தைகளின் உலகம், மனிதனின் சிறுமை எண்ணங்கள் என பல்வேறு தளங்களில் எளிமையான நடையில் சித்தரிப்பின் லாவகத்தோடும், உள்ளோடும் துயர இழையுடனும், நகைச்சுவையோடும்,  வாசகனுக்கு சலிப்பில்லாமலும் ஒரு Feel good தொகுப்பாக இருக்கிறது ராஜா வந்திருக்கிறார்! 

பதிப்பகம் - காலச்சுவடு
பக்கங்கள் - 270
விலை - ₹300

நூல் அறிமுகம் - தாய் - மாக்சிம் கார்க்கி (தமிழில் தொ.மு.சி.ரகுநாதன்)

#வாசிப்பு2020

9/2020

தாய் - மாக்சிம் கார்கி
தமிழில் - தொ.மு.சி ரகுநாதன்

ரஷ்ய நாட்டின் ஒரு தொழிலாளர் குடியிருப்பில் இருக்கும் ஒரு குடிகாரத் தொழிலாளியின் மனைவியான பெலகேயா நிலாவ்னா மற்றும் அவளது மகன் பாவெல் விலாவிச்... பாவெல்லின் அப்பா இறந்த பிறகு அவனுடைய நடவடிக்கைகளில் நிகழ்ந்த மாற்றங்களை பயத்துடன் கண்ணுற்று துயர் கொள்கிறாள் தாய் பெலகேயா...

மகனின் போக்கு அரசிற்கு எதிராகவும், ஜார் மன்னின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும் இருப்பதை கண்டு மிகவும் மன வருத்தத்திற்கு உள்ளாகிறாள்...சில நாட்களுக்கு பிறகு புதிய மனிதர்கள் சிலர் பாவெல்லை பார்த்து விவாதிப்பற்காக அவர்களின் வீட்டிற்கு வருகிறார்கள்...

நிறைய புத்தகங்களை வாசித்து புரட்சிக்கான திடமுடையவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள நிறைய விவாதங்களை மேற்க்கொள்கிறார்கள்...இந்த விவாதங்களை கவனித்த தாய்க்கு தன்னுடைய மகன் ஒரு ஞாயமான விசயங்களுக்காக தான் போராட ஆயத்தமாகிறான் என்கிற விசயம் பிடிபடுகிறது...
கொஞ்சம் கொஞ்சமாக தாயும், பாவெல் மற்றும் அவனது தோழர்களின் கொள்கைகளின் பால் ஈர்க்கப்படுகிறாள்...ஒரு கட்டத்தில் பாவெலும் அவனது தோழர்களும் கைது செய்யப்பட தாயை நகரத்தில் இருக்கும் தோழன் நிகலாய் இவனோவிச்சின் வீட்டிற்கு கூட்டிச் சென்று தங்க வைத்துக் கொள்கிறான்...அங்கே இன்னும் நிறைய தோழர்களுடைய அறிமுகம் கிடைக்கிறது...தாய் தன்னை இயக்கத்தின் முழுமையான பணிகளில் தன்னை முழுவது ஈடுபடுத்திக் கொள்கிறாள்...

அதே நேரத்தில் ரஷ்ய மக்கள் வாசிப்பில் எவ்வளவு ஆர்வம் கொண்டவர்கள் என்பதை இந்த நாவலின் மூலம் அறிய முடிகிறது...மாபெரும் புரட்சிகள் அனைத்தும் தூண்டப்படுவதற்கு எழுத்து எவ்வளவு உதவிகரமான கருவியாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நூல் உணர்த்துகிறது! 

ஒவ்வொரு நாட்களும் புரட்சிகர கருத்துக்களின் தாக்கத்தால் ஆட்கொள்ளப்படுகிற பெலகேயா நிலாவ்னா என்ன மாதிரியான மனப் போக்குகளுக்கு ஆளாகிறாள் என்பதை கார்க்கி எழுத்தின் ஊடாக உணர்த்துகிறார்...புரட்சி என்பது முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய விசயம் என்பதை உணர முடிகிறது...தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் ஆண்களை விட பெண்கள் இன்னும் உத்வேகத்துடன் உண்மைக்கான குரலாக ஒலிப்பார்கள் என்பதை கதையில் வரும் பெலகேயா நிலாவ்னா, சோபியா, சாஷா பொன்ற நிறைய கதாப்பாத்திரங்கள் வெளிப்படுத்துகின்றனர்...

நான் வாசித்தது NCBH இன் பதிப்பு...மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தாலும்...புத்தகத்தின் பிழைத் திருத்தம் சரியாக செய்யப்படவில்லை...ஒரு சில பக்கங்களை எல்லாம் வாசிக்கையில் யார் பேசுறார்...யார் பதில் சொல்கிறார் என்று குழப்பம் வருகிறது அளவிற்கு ஆண்பால் பெண்பால் குறிப்புகளிலேயே நிறைய பிழைகளை காண முடிகிறது...

காலங்கள் மாறலாம் ஆனால் காட்சிகள் இன்னும் அதே மாதிரி தான் இருக்கிறது என்பதை உலகின் பல மூலைகளில் நடக்கும் அடக்குமுறை, பாசிச வெறி, தொழிலாளர்கள் சுரண்டல் என்கிற புள்ளியில் இருந்து பார்க்கும் போது தாய் எல்லா காலத்துக்கும் பொருந்துகின்ற ஒரு உலகப்படைப்பு என்பதில் எந்த ஐய்யமும் இன்றி நிரூபணம் ஆகிறது! 

பதிப்பகம் - NCBH
பக்கங்கள் - 534
விலை - ₹350

நூல் அறிமுகம் - மிஷன் தெரு - தஞ்சை ப்ரகாஷ்

#வாசிப்பு2020

8/2020

மிஷன் தெரு - தஞ்சை ப்ரகாஷ்

சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் மன்னார்குடி மற்றும் தஞ்சை மாநகரில் வாழந்த கிருஸ்துவ கள்ளர் குடும்பத்துப் பெண்ணான எஸ்தரின் வாழ்கையின் ஊடாக அந்த காலத்தில் நிலவிய சாதிய முறையை பற்றியும், மக்களின் வாழ்வியல் முறையும், கிறிஸ்துவ மதம் மாறிய மக்களின் வாழ் நிலையையும்...முக்கியமாக பெண்களின்  நிலையையும் ஒரு குறுக்கு வெட்டுத் தொற்றமாக எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் ப்ரகாஷ்...

நிறைய கனவுகளுடனும், ஆசைகளுடனும் மன்னார்குடியில் 15 வயது நிரம்பிய தைரியமான, ஆங்கிலப் புலமை, இசை ஞானம்,  சமத்துவ சமுதாயத்தில் நம்பிக்கையுள்ள பெண்ணாக வலம் வருகிறாள் எஸ்தர்...அந்த காலகட்டத்தில் 15 வயதில் ஒன்று வீட்டில் விதவையாக இருப்பார்கள் அல்லது கணவன் வீட்டில் இருப்பார்கள்... ஆனால் எஸ்தர் மட்டும் அதில் விதிவிலக்காக இருந்தாள்...
வாழ்வில் எஸ்தர் எடுத்த ஒரு தவறான முடிவினால் இடையில் லாசரஸ் என்னும் ஒருவனின் வலையில் மாட்டிக் கொண்டு திருமண பந்தத்தில் வலுக்கட்டாயமாக நுழைத்தனுப்பப்படுகிறாள்...

அதன் பிறகு அவளின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை ப்ரகாஷ் தன் இயல்பான எழுத்து நடையில் தொய்வின்றி எழுதியிருக்கிறார்! 

18ம் நூற்றாண்டின் அரசியல், சமூக நிலைப்பாடுகள், தஞ்சை மாகாணத்தில் சரபோஜி மன்னர்களின் இக்கட்டான சூழல் என அன்றைய காலகட்டத்தையும் கதைக்கு இயைந்தாற்போல பயன்படுத்தியிருக்கிறார்! 

பதிப்பகம் - வாசகசாலை பதிப்பகம்
பக்கங்கள் - 110
விலை - ₹120

நூல் அறிமுகம் - ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்

#வாசிப்பு2020

7/2020

ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான் 

முதல் உலகப் போர் முடிந்த கால கட்டத்தில் குமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் என்னும் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் கடலோர கிரமத்தில் வசிக்கும் மக்களையும், அந்த கிராமத்தின் தலைவனாக தன்னை பாவித்திருக்கும் வடக்கு வீட்டு அகமது கண்ணு முதலாளி என்கிற கதாபத்திரத்தின் ஊடாக தலைக்கணம் என்னென்ன இழிவான நிலைக்கு ஒருவனை கொண்டு செல்லும் என்பதை நாவல் காட்டுகிறது...

இஸ்லாமிய பழமைவாதத்தையும், அதில் இருக்கும் மூட நம்பிக்கைகளையும், முதலாளியின் அடக்குமுறையையும் எதிர்த்து குரல் கொடுக்கும் சுறாப்பீலி விற்கும் மஹமூது ஒரு ஹீரோவாகவே கட்சியளிக்கிறார்...

அந்த காலகட்டத்தில் இஸ்லாத்தில் பெண்களின் எண்ணங்களுக்கு மதிப்பே கொடுப்பதில்லை என்பதையும் முதலாளியின் மகள் ஆயிஷா, அவரின் தங்கை நூகுபாத்துமா ஆகிய  கதாப்பாத்திரங்களின் மூலமாக உணர்த்துகிறார்...

ஊரில் ஆங்கிலப் பள்ளிக் கூடம் வருவதை எதிர்க்கும் மக்கள்...மதரஸா என்னும் குர்ஆன் சொல்லித்தரும் பள்ளிக் கூடத்தை தவிர மற்றதை ஹராம் என்று ஒதுக்கும் மக்கள் என இஸ்லாமிய மக்களின் ஊடாக இருந்த பிற்போக்குத் தனங்களை எல்லாம் உள்ளபடியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் மீரான்...

நாவலை ஆரம்பிக்கும் போது வழக்குச் சொற்களை புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருந்தாலும் மொழிநடையில் நம்மை இயல்பாக நாவலின் ஊடக பயணித்து ஒன்றி வாசிக்க வைத்து விடுகிறது! 

பதிப்பகம் - காலச்சுவடு
பக்கங்கள் - 215
விலை - ₹225

நூல் அறிமுகம் - ஜிப்ஸி - ராஜு முருகன்

#வாசிப்பு2020

5/2020

ஜிப்ஸி இந்த வார்த்தையை இதற்கு முன்பு மாருதி மோட்டார் நிறுவனத்தின் ஜிப்ஸி ஜீப்பில் இருந்து அறிந்திருந்தேன்...அந்த வார்த்தையின் அர்த்ததை நாடோடி என்பதாக சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன்...அதுவும் ராஜுமுருகனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் வழியாக தான்...

ராஜு தானும் தன்னுடைய உதவியாளர்கள் இருவருடன் இணைந்து பயணித்த தேசாந்திரிப் பயணத்தின் அனுபவக் குறிப்புகள் தான் விகடனில் தொடராக வெளியான ஜிப்ஸி கட்டுரைத் தொகுப்பு...காசியில் ஆரம்பித்து பயணத்தில் தாங்கள் சந்தித்த அனுபவங்கள், பார்த்து பிரம்மித்து வியந்த மனிதர்கள், ஆளுமைகள் என நம்மையும் அவரோடு கூட்டிச் செல்கிறார்...எழுத்தில் சிறு நகைச்சுவை தொனியை தேவையான இடங்களில் கையாண்டிருக்கிறார்...13 கட்டுரைகளிலும் சலிப்பில்லாமல் ஊர் சுற்றிக் காண்பித்து புதிய மனிதர்களையும் இந்தியாவின் பல்வேறு நாடோடி இனங்களையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்...

நாம் தினமும் வீதிகளில் பார்க்கும் ராமர், லட்சுமண, அனுமார் வேடமேற்று யாசித்து வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் குழு மக்கள், மோட்டார் சைக்கிள் கூண்டு சாகசம் நடத்தும் கேரளத்தைச் சேர்ந்த மரியம், வீதிகளில் கூத்துக் கட்டும் கழைக்கூத்து கலைஞர்கள், இன்னும் சில விளிம்பு நிலையில் இருக்கும் நாடோடிக் குழுக்களுடன் இருந்து சேகரித்த அனுபவங்களையும் பயணத்தின் வழியே அடைந்த தரிசனங்களையும் அதே சுவாரஸ்யம் மாறாமல் கொடுத்திருக்கிறார் ராஜு முருகன்!

இந்த ஜிப்ஸி புத்தகம் கொடுத்த நினைவுகளோடு, ஜிப்ஸி படத்தையும் காண ஆவலாய் காத்திருக்கிறேன்! :)

ஜிப்ஸி - ராஜு முருகன்

பதிப்பகம் - விகடன்
பக்கங்கள் - 136
விலை - ₹115

Saturday, February 15, 2020

நூல் அறிமுகம் - சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்

#வாசிப்பு2020

4/2020

அலைக்கழிப்பின் வழி அல்லல்படுகின்ற ஒருவனின் வாழ்விற்கும், சாவிற்கும் இடையிலான போராட்டத்தின் மங்கலான ஒரு சித்திரம் தான் சுபிட்ச முருகன் புதினம்...சாபத்தின் அடர்த்தியை அதன் வீரியத்தை அதுவிடுக்கும் செயதியை கதை நெடுகிலும் காமத்தின் ஊடாக சொல்லுகிறார்...

இளங்கா அத்தையின் மஞ்சள் பூசிய முகமும், அவளின் கோபமும், அதனால் ஏற்பட்ட சாபமும் நாயகனின் குடும்பத்தில் பல துர்மரணங்களை ஏற்ப்படுத்தி இறுதியில் அந்த சாபம் இறுதியாக நாயகனை காமத்தின் வழி எவ்வாறெல்லாம் அலைக்கழித்து இறுதில் சுபிட்ச முருகனின் காலடியில் பாவம் தீர்க்கிறான் என்பதை உயிரோட்டமாக எழுதியிருக்கிறார்...



கதையில் நிறைய இடங்களில் போதாமையை உணர முடிகிறது...இன்னும் கொஞ்சம் இந்த சம்பவத்தைப் பற்றி விவரித்து எழுதியிருக்கலாம் என தோன்றுகிறது! உதாரணமாக நாயகன் எச்சில் துப்பும் சாமியின் கோயிலுக்கு போகும் வரை நன்றாக இருந்தவனாக காட்டிவிட்டு, அடுத்த காட்சியில் அவனை முடவனாக காட்டியிருக்கிறார்...இடை இடையில் தொடர்பு துண்டித்து துண்டித்து இணைந்து கொண்டு வாசித்த ஒரு அனுபவத்தைக் கொடுத்தது சுபிட்ச முருகன்!

சரவணன் சந்திரன் அண்ணன் இதுவரை எழுதிய நூல்களில் இருந்து சற்றே விலகி இறையியலையும், மெய்ஞ்ஞானத்தையும் சேர்த்து வித்தியாசமான ஒரு நாவலை கொடுத்திருக்கிறார்! :)

சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்

பதிப்பகம் - டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள் - 128
விலை - ₹150

நூல் அறிமுகம் - உலகை வாசிப்போம் - எஸ்.ராமகிருஷ்ணன்

#வாசிப்பு2020

3/2020

உலக இலக்கியம் குறித்த அறிமுகம் என்றாலே எஸ்.ராமகிருஷ்ணன் தான் முதலில் மனதில் வந்து நிற்கிறார்... காரணம் அவருடைய உலக இலக்கிய பேருரைகளை யூடியூப்பில் பார்த்து பழகியது தான்!

31 கட்டுரைகளை கொண்டு புத்தகம் உலகை வாசிப்போம்...உலக இலக்கிய பேருரைகளில் எஸ்.ரா ஒரு நாவலோ,  சிறுகதையோ அல்லது கட்டுரை குறித்து பேசியிருப்பார். ஆனால், இந்த புத்தகத்தில் அவர் அறிந்த உலக எழுத்தார்களின்/கவிஞர்களின் (தஸ்தாயெவ்ஸ்கி, போர்ஹே, ஆல்டெர்ன்பெர்க், கீட்ஸ், ரூமி மற்றும் பல ஆளுமைகள்) தனிப்பட்ட வாழ்க்கையையும், சுவாரஸ்யமான தகவல்களை தொகுத்து வழங்கியிருக்கிறார்.


சில உலக இலக்கியத்தை பற்றிய புத்தகங்களை வாசிக்கும் போது சலிப்பு மேலிடும்...ஆனா இந்த புத்தகத்தை பொறுத்த மட்டில் எழுத்து நடை தொய்வில்லாமல் ஓவர் டோஸ் ஆகாமல் கொடுத்திருக்கிறார்! உலக இலக்கியம் வாசிக்க தொடங்க நினைக்கும் நண்பர்களுக்கு இந்த நூல் மிகவும் உதவியாக இருக்கும்!

 உலகை வாசிப்போம் - எஸ்.ராமகிருஷ்ணன்

தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள் : 200
விலை : ₹200

நூல் அறிமுகம் - ஆப்பிளுக்கு முன் - சி.சரவண கார்த்திகேயன்

#வாசிப்பு2020

2/2020

காந்தி இந்த பெயரைக் கேட்டவுடன் நம் மனதிற்குத் தோன்றும் மகாத்மா தோற்றத்தையும் தாண்டி நம்மில் நிறைய பேருக்கு அவருடைய பிரம்மச்சரிய சோதனைகளைப் பற்றிய விமர்சனங்களையும், கண்ணோட்டங்களையும் காந்தியின் கண்ணோட்டத்தில் இருந்து விளக்கியிருக்கும் நூல் தான் ஆப்பிளுக்கு முன்.



காந்தியின் இறுதிவரை கூட இருந்த அவரது பேத்தி முறையான மநுபென் காந்தியின் மூலம் காந்தியின் வாழ்வில் நிகழ்ந்த சம்பங்களை கதையாக சொல்லியிருக்கிறார். அஹிம்சை, எளிய வாழ்க்கை, உண்மையின் பக்கம் நின்று போராடிய காந்தியின் இன்னொரு பிடிவாதமான பக்கத்தை இந்த நாவல் கூறுகிறது. காந்தியின் வாழ்வைப் பற்றிய தெளிவான வாதங்களையும், நோக்கங்களையும், தீர்க்க தரிசனங்களையும் காந்தியின் மூலமாகவே எடுத்துரைக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் சரவணகார்த்திகேயன்.

ஆப்பிளுக்கு முன் - சி.சரவணகார்த்திகேயன்

உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 166
விலை : ₹170

நூல் அறிமுகம் - தறியுடன் - இரா.பாரதிநாதன்

#வாசிப்பு2020

1/2020

தறியுடன் - இரா.பாரதிநாதன்

தலைப்பை பார்த்தவுன் வாங்க வேண்டும் என மனதில் நினைத்த புத்தகம்! காரணம் கைத் தறியின் சத்தத்தையும், பவர் லூம்ஸின் சத்தத்தையும் கேட்டு வளர்ந்தவன் என்பதால்...பட்டு, நூல், பேட்டு, கண்டிகை என நெசவுத் தொழிலை மையமாக கொண்டு பல நூறு குடும்பங்களில் ஒன்று எங்களின் குடும்பமும்...அப்பாவினால் நெசவைத் தொடர முடியாவிடாலும் சொந்தங்கள் பெரும்பாலும் தறியை நம்பித் தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்...

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் தான் தறியுடன் நாவலின் நிகழ்விடம்...கதையின் நாயகன் ரங்கன். அவனுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் நாவல்...சேலத்தின் வட்டார வழக்கு, நெசவு செய்யும் மக்களின் வாழ்க்கை முறை என ஆரம்பத்தில்லிருந்தே கதை வாசிப்பவரை உள்ளே இழுத்துக் கொள்கிறது! சிரமம்மில்லாத எழுத்து நடை, வர்ணனை என எல்லாவற்றிலும் ஒரு சிறு பிசுறு இல்லாமல் கதையில் நன்றாக ஒன்றி வாசிக்க முடிகிறது...



தறியோட்டும் நெவுத் தொழிலாளர்கள் தினமும் சந்திக்கும் இன்னல்கள், அவமானங்களையும் அவற்றை எல்லாம் எதிர்த்து போராடும் நக்சல்பாரி கம்யூனிச இயக்கத்தைப் பற்றியும் அழகாக கொடுத்திருக்கிறார்...ரங்கன் எவ்வாறு இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதன் முழுநேர சேவகனாக வருகிறான்...இயக்கத்தில் இருக்கும் தலைமறைவுத் தோழர்கள் படும் இன்னல்கள்...அரசும், முதலாளிகளும் சேர்ந்து தொழிலாளர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கச் செய்யும் சதித்திட்டங்கள் என நாவல் தொய்வில்லாமல் எழுதியிருக்கிறார்...

மக்களுக்காக போராடும் போராளிகளை அரசும், அதன் இயந்திரமும் தீவிரவாத முத்திரை குத்தி அழிக்க நினைக்கும் அக்கிரமங்களை தோலுரித்துக் காட்டியுள்ளது தறியுடன்!

புத்தகம் : தறியுடன்
ஆசிரியர் : இரா.பாரதிநாதன்
பதிப்பகம் : பொன்னுலகம் புத்தக நிலையம்
பக்கங்கள் : 780
விலை : 650/-