Wednesday, July 14, 2021

நூல் அறிமுகம் - சேப்பியனஸ் யுவால் நோவா ஹராரி (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)

இந்த புத்தகத்தை வாங்கி சுமார் இரண்டு ஆண்டுகள் இருக்கும்...அவ்வப்போது எடுத்து ஒரு பத்து பக்கங்கள் வாசித்துவிட்டு திரும்ப வைத்துவிடுவேன்... கடந்த ஆண்டு ஏதோ ஒரு வேகத்தில் யுவால் நோவா ஹராரியின் ஹோமோடியஸ் வாசித்து முடித்தேன்... ஹோமோடியஸ் நம்முடைய எதிர்கால உலகம் எப்படியெல்லாம் அமைய வாய்ப்பிருக்கிறது என்பதை ஆராய்ச்சி நோக்கிலும், தற்போதுள்ள தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை அனுமானம் செய்யும் ஒரு படைப்பு... அது ஏற்ப்படுத்திய தாகத்தால் இந்த சேப்பின்ஸ் புத்தகத்தை இந்தமுறை வாசித்தே தீருவது என்னும் முடிவில் 3 மாதங்களுக்கு முன் கையில் எடுத்தேன்...

பொதுவாகவே வரலாறு என்பது ஒரு வரட்சியான சப்ஜெக்ட்,  போர் அடிக்கும் என்பது போன்ற மனப் போக்கை வரலாற்று ஆசிரியரான ஹராரி உடைத்து விடுகிறார்...ஜெருசலேம் ஹிப்ரூ பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்...கூடவே இவர்  "A Brief History of Humankind" என்கிற தலைப்பில் இணைய வகுப்புகளை நடத்தியுள்ளார்! மொத்தம் 62 காணொளிகளைக் கொண்ட இந்த இணைய வகுப்புகள் யூடியூப் இணையதளத்தில் காணக் கிடைக்கின்றன...

சுமார் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெடிப்பிலிருந்து தோன்றிய பூமியில்,  60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஹோமோ பேரினத்தற்கும், சிம்பான்சிகளுக்கும் பொதுவான மூதாதையர்கள் தோன்றுகிறார்கள்... அன்றிலிருந்து நாம் இன்று வாழும் நவீன யுகம் வரைக்குமான ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இந்த புத்தகம் கொடுத்திருக்கிறது...அதுவும் சலிப்பு தட்டாத வண்ணம் நிறைய சுவாரஸ்யமான தகவல்களோடு!


பூமியின் வரலாற்று காலக்கோட்டினை நான்கு பகுதிகளாக பிரித்திருக்கிறார் ஹராரி அவை
1. அறிவுப் புரட்சி
2. வேளாண் புரட்சி
3. மனிதகுல ஒருங்கிணைப்பு பெருமளவில் நடந்த காலகட்டம்
4. இறுதியாக தற்போதைய அறிவியல் புரட்சி யுகம்

1.அறிவுப் புரட்சி
வரலாறு தோன்றுவதற்கு நெடுங்காலம் முன்னரே மனித இனத்தைப் போன்ற விலங்குகள் சுமார் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முதலில் தோன்றின... மனித குலத்தின் தொட்டில் என கூறப்படும் ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்குப் பகுதியில் முதன் முதலில் மனிதனை ஒத்த உயிரினங்கள் தோன்றியதாக கூறுகிறார்...
நம்முடைய இனமான ஹோமோ ( மனிதன்) சேப்பியன்ஸ் (அறிவார்ந்தவன்) மட்டுமல்லாது பூமியில் இன்னும் பல்வேறு மனித இனங்களும் வாழ்ந்து வந்தன அவற்றுள் முக்கியமானவைகளாக ஹோமோ நியான்டர்தாலென்சிஸ் (நியாண்டர் பள்ளத்தாக்கை சேர்ந்த மனிதன்),  ஹோமோ எரெக்டஸ் (நிமிர்ந்த மனிதன்), ஹோமோ சோலோஎன்சிஸ் (இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சோலோ பள்ளத்தாக்கை சேர்ந்தவர்கள்),  அடுத்தது கடல் மட்டம் தாழ்வாக இருந்த காலகட்டத்தில் உருவான ஒரு குள்ள மனித இனமான ஹோமோ ஃபுளோரெசியென்சிஸ் அதிகபட்சமாக ஒரு மீட்டர் உயரம் கொண்டவர்களாகவும், 25 கிலோ எடைக்கும் குறைவானவர்களாகவும் இருந்திருக்கின்றனர்...

சேப்பியன்ஸ் கிழக்கு ஆப்பிரிக்காவில் உருவாகி சுமார் 70000 ஆண்டுகளுக்கு முன்பாக புவி முழுவதும் பரவத் தொடங்கினர்...அப்படி அவர்களின் பரவலின் போது இன்னொரு மனித இனமான நியண்டர்தால் இனத்தவர்களை எதிர் கொள்கின்றனர்... அப்போது அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாமல்போகவே பின்வாங்கி விடுகின்றனர்... இரண்டாம் ஆக்கிரமிப்பின் போது சேப்பியன்ஸ் இனம், நியண்டர்தால் மட்டுமல்லாது மற்ற அனைத்து இனங்களையும் அழித் தொழிக்கும் வேலையில் வெற்றி பெருகின்றர்...

சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்புவரையிலான காலகட்டத்தில் படகுகள், எண்ணெய், விளக்குகள், வில் அம்புகள், ஊசிகள் (கதகதப்பான ஆடைகளத் தைப்பதற்கு இன்றியமையாதவை) ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன... இவைகளின் துணை கொண்டு சேப்பியன்ஸ் இனம் மற்ற இனங்களை வெற்றி கொண்டு உலகத்திலிருந்து அகற்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்...

இந்த காலகட்டத்தில் முளைத்தப் புதிய சிந்தனை வழிகளும் கருத்துப் பரிமாற்ற வழிகளும் தான் அறிவுப்புரட்சயாகும். மரபுச் சிதைவுகளின் காரணமாக இந்த சிந்தனை மாற்றமும்,கருத்துப் பறிமாற்ற வழிகளும் மனித இடத்திற்குத் தோன்றியிருக்கலாம் எனக் கூறுகிறார்.இதுவும் முதல் மொழியல்ல...எல்லா விலங்கினங்களும் அதற்கே உரித்தான மொழிகளில் எச்சரிக்கை சமிக்கைகளை பகிர்ந்து கொள்கிறது... அதாவது ஒரு குரங்கினால் "எச்சரிக்கை, ஒரு சிங்கம் வருகிறது" என்பதை ஒரு வித ஒளி அமைப்பின் மூலமாக வெளிப்படுத்த முடியும்... ஆனால், மனிதனால் ஆற்றின் வளைவின் அருகில் ஒரு சிங்கம் ஒரு காட்டெருமைக் கூட்டத்தைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்ததை இன்று காலையில் பார்த்தாக ஒரு நவீன மனிதனால் தன் நண்பர்களிடம் கூற முடியும். பிறகு, துல்லியமாக அது எந்த இடம் என்பதையும், அதற்கு செல்லக்கூடிய பாதைகளைப் பற்றியும் கூறமுடியும்...

இவ்வாறாக எப்படி மொழி உருவானது என்பதையும், அதன் ஒவ்வொரு கட்டங்களும் மனித தேவைகளின் பொருட்டு எப்படி எழுத்துருக்கள் பெற்றன என்பதை முதல் பகுதியில் அற்புதமாக விளக்கியிருக்கிறார் ஹராரி!

2. வேளாண் புரட்சி
பல்லாயிரம் ஆண்டுகளாக நாடோடியாக, வேட்டையாடி இனமாக உலகைச் சுற்றித் திரிந்த சேப்பியன்ஸ் இனம், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேளாண்மையின் கண்டுபிடிப்பால் அதன் அலைச்சல் ஒரு முடிவுக்கு வந்தது... ஒருசில விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்களைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தெரிந்து கொண்ட மனிதன் தனது நேரம் மற்றும் முயற்சி முழுவதையும் அதற்கு செலவிட்டனர்...

சூரியன் காலையில்  தோன்றி மாலையில் மறையும் வரை அவர்கள் விதைகளை விதைத்தனர், தாவரங்களுக்கு நீர் பாய்ச்சினர், நிலத்திலிருந்து களைகளைப் பறித்தனர், செழிப்பான புல்வெளிகளுக்கு செம்மறி ஆட்டுக் கூட்டங்களை மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்றனர். இந்த வேலைகள் தங்களுக்கு அதிகமான கனிகளையும், தானியங்களையும், இறைச்சியையும் கொடுக்கும் என அவர்கள் நினைத்தனர். மனிதர்களின் வாழ்கைமுறையில் ஏற்பட்ட ஒரு புரட்சி அது. அது வேளாண் புரட்சி என்று அழைக்கப்படுகிறது.

தென்கிழக்காசிய துருக்கி, மேற்கு ஈரான், லெவான்ட் ஆகிய பகுதிகளின் பசும்புல்வெளி நிலங்களில் கி.மு. 9500 - 8500 வாக்கில் மனிதர்களின் கவனம் வேளாண்மையை நோக்கித் திரும்பியதாக ஆசிரியர் கூறுகிறார்... இந்த மாற்றங்கள் எல்லாம் ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை...எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியக் கிழக்கை அடைந்த ஹோமோ பேரினம் அடுத்த ஐம்பதாயிரம் ஆண்டுகளை விவசாயம் இல்லாமல் அதன் இயல்பிலேயே வாழ்ந்து வந்தது...

நாடோடியாக இருந்த மனிதனால் ஒருசில செழிப்பான காலகட்டத்தில் பெருகிய மக்கள் தொகையில் இருந்த குழந்தைகளையும், முதியவர்களையும் தூக்கிச் சும்ப்பது பெரும் சுமையாக இருந்திருக்கிறது... குறிப்பிட்ட பனி யுகத்திற்கு பிறகாக கிடைத்த செழிப்பான கோதுமை தானிய வளர்ச்சி அவர்களை குறிப்பிட்ட பகுதிகளில் தங்க வைத்து விடுகிறது... அந்த தானியங்களை வைத்திருக்க கிடங்குகள், கொள்கலன்களுக்கு எடுத்துச் செல்லும் வழியில் சிதறிய தானியங்கள் முளை விட்ட போது விவசாயம் என்னும் செயல்முறை மனித இனத்தின் மூளைக்கு கிட்டியதாக கூறுகிறார்.

மக்கள் நிரந்தரமான கிராமங்களுக்குக் குடியேறியதையும் அவர்களுக்கு உணவு அபரிமிதமாக கிடைத்ததன் பயனாக மக்கள் தொகை அதிகரித்தது... நாடோடி வாழ்க்கையை கைவிட்டதின் விளைவாக பெண்கள் ஒவ்ஙொரு ஆண்டும் குழந்தைகளை கருவில் சுமக்க வேண்டி போனது...அதனால் விரைவில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் நிறுத்தப்பட்டு கூழும் கஞ்சியும் கொடுக்கப்படுகிறது...

இப்படியாக ஒரு உடைமை சமூகம் உருவாகி அது வசதியாக வாழ்வதற்காக மனித இனம் நிறைய பாரங்களை சுமக்க வேண்டியதாக இருந்தது... வேட்டையாடி மனிதனை விட ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் காலை முதல் இரவு வரை உழைக்க வேண்டியதாக ஆகியது... ஆக, மனித இனம் ஒரு இடத்தில் தங்கியிருந்து ஆடம்பர வாழ்கை வாழ அதிக சிரமங்களை சந்திக்க வேண்டியதாகிப் போனதாக கூறுகிறார்...சுதந்திரமாக சுற்றித் திரிந்த மனிதன் விவசாயத்தின் கண்டுபிடிப்பால் அவனுக்கு அவனே ஆப்பின் மேல் உக்கார்ந்து கொண்டான் என்றே கூறலாம்...

3. மனித குல ஒருங்கிணைப்பு

வேட்டையாடி குழுவாக இருந்த வரைக்கும் சேப்பியன்ஸ் சில நூறு எண்ணிக்கையினால் ஆன குழுக்களாக இருந்து வந்த காலகட்டத்தில் அவர்கள் வேட்டையாடி சேகரிக்கும் உணவு, கனிகளை ஒரு பொதுப்படையான கம்யூனாக இருந்து பகிர்ந்து கொண்டனர்... ஆனால் நிறைய சமயங்களில் அவர்களுக்குள் பூசல்களும், உடலியல் தேவைகளின் காரணமாக பெண்களை கவர்வதற்காக சண்டைளும் அதிகமாக நடைபெற்றன...இப்படி இருந்த சமூக குழுக்களுக்குள் அவ்வதுப்போது ஒருங்கிணைப்பு குலைந்து போவது சாதாரணமான விசயமாக இருந்து வந்துள்ளது...

வேளாண் புரட்சி தொடர் வேலைப்பளுவையும், நிலையில்லாத்தன்மையை கொண்டுவந்திருந்தாலும் அதனால் மனித இனம் நிறைய அனுகூலங்களை பெற்றது... விவசாயம் செய்யும் சமூகம் முதலில் ஒரு நிலையான இடத்தில் தங்கி தங்களுக்குத் தேவையான வளவசதிகள் எல்லாம் அந்த இடத்தில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய கற்றுக் கொண்டன...பிறகு அவர்களுக்குத் தேவையான உறைவிட வசதிகளை பெருக்குவதையும், கிராமங்களை உருவாக்குவதற்கான திட்டங்களையும் தீட்டத் தொடங்கின...இதில் மனித ஒத்துழைப்பு மிகவும் பிரதானமான ஒன்றாக இருந்தது!

இதன் தொடர்ச்சியாக கலாச்சாரங்கள் தோன்றின ஒவ்வொரு கலாச்சாரங்களிலும் ஒத்துழைப்பை பெருக்குவதற்கு தேவையான கட்டுக்கதைகளை  மக்களிடையே பரவத் தொடங்கின...உதாரணத்திற்கு கடவுள், பணம், அரசு ஆகிய கற்பனையான விஷயங்கள் மனிதர்களுக்கு நம்ப வைக்கப்பட்டது...இதன் மூலம் மனிதர்களை சிறப்பாக ஒரங்கிணைக்க முடிந்தது... இந்த ஒருங்கணைப்பு மற்ற விலங்குகளிலிருந்து மனிதனை முற்றிலும் வேறான ஒரு பெரும் வாழ்வியல் விலங்கு கூட்டமாக மாற்றியமைத்தது... முக்கியமாக பணத்தின் அறிமுகம் மனிதனின் வாழ்கையை மொத்தமாக புரட்டி போட்டது!

4. அறிவியல் புரட்சி
மனித இனம் தோன்றி கோடிக் கணக்கான ஆண்டுகள் ஓடியிருந்தாலும் அறிவியல் புரட்சி கடந்த 500 ஆண்டுகளாக மட்டுமே நகிழ்ந்த/நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றாகும்! எல்லாம் அறிந்தவன் (சேப்பியன்ஸ்) என்று மனிதகுலம் தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்டாலும் அவர்களின் அறிவியல் குறித்த பிரக்ஞையை மனிதர்கள் தங்களுக்கு அறியாமை இருக்கிறது, இன்னமும் மனித இனம் நிறைய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற ஒரு எண்ணத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது என கூறுகிறார் ஹராரி!

ஒருகாலத்தில் பேரரசுகள் நாடுகளை போரின் மூலம் ஆக்கிரமிப்பு செய்வதற்காக மேற் கொள்ளப்பட கடற்பயணங்களில் இருந்து அறிவியல் புரட்சி யுகம் தொடங்குகிறது! அதன் நீட்சி தான் இப்போது உலகத்தை தவிர வேறு ஏதாவது கிரகத்தில் மனித இனத்தை நிலை கொள்ள வைக்க முடியுமா என்பது வரை சென்றிருக்கிறது... இந்த அறிவியல் புரட்சி யுகத்தில் தான் மனிதன் நல்ல சுகாதாரத்துடனும், பசியின்றியும் வாழ வழிவகை செய்யப்பட்டது என்பதை ஆசிரியர் நிறைய உதாரணங்கள் மற்றும் கணிப்புகளின் மூலம் விளக்குகிறார்...

உலகம் முழுவதும் பல்வேறு கடவுள்/இயற்கை சார்ந்த நிறைய மதங்கள் இருந்த போதிலும், அறிவியல் புரட்சிக்கு பிறகு பிறந்த மதங்களாக கம்யூனிசம், தாராளவாதம், முதலாளித்துவம் ஆகியவற்றையும் மதங்களாகவே வகைபடுத்துகிறார்...

அறிவியல் புரட்சியை தொடர்ந்து நடக்கும் தொழிற் புரட்சி மக்களின் தேவைகளையும், சமூக அடுக்குகளிலும் பல்வேறு மாற்றங்களை எப்படி நகிழ்த்தியது என்பதை நிறைய உதாரணங்களை கொடுக்கிறார்... நவீன தொழிற் சந்தைகளின் தோற்றதையும், பொருளாதாரத்தின் அடிப்படைகளையும், கடன் என்கிற ஒரு கருவி உலக நாடுகளின் முன்னேற்றத்தில் என்ன விதமான தாக்கத்தை கொடுத்தது என்பதையும் விரிவாக விளக்கியுள்ளார்!

இறுதியாக விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதனின் அடுத்தகட்ட பாய்ச்சலாக கடவுள் என்கிற நிலைக்கு அதிமனித இனத்தை உருவாக்குவதன் மூலம் முதலாளித்துவம் இப்போதிருக்கும் மனிதனை அடக்கியாள ஒரு சக்திவாய்ந்த மேட்டுக்குடியை உருவாக்கும் கில்கமெஷ் பணித்திட்டத்தை பற்றிய விவரங்களை இறுதி அத்தியாயங்கள் விளக்குகின்றன!

மனித இனத்தைப் பற்றிய பருந்துப் பார்வையை இந்த புத்தகம் நிச்சயமாக கொடுக்கும்! அனைவரும் வாசிக்க வேண்டிய தவற விடக்கூடாத புத்தகம் சேப்பியன்ஸ்!

Saturday, December 26, 2020

நூல் அறிமுகம் - மணல் பூத்த காடு - முஹம்மது யூசுஃப்

#வாசிப்பு2020

17/2020

மணல் பூத்த காடு - முஹம்மது யூசுஃப்

பயணம் மனித நாகரிகத்தின் வளர்ச்சியையும், அறிவையும் விரிவாக்கியது...தேவைகளின் நிமித்தமாகவும், நிலங்களின் பண்புகளை அறியவும் மனிதன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணப்படுகிறான்...அவன் பயணப்பட்டிருக்கவில்லை என்றால் இந்த அளவிற்கு நாகரிக வளர்ச்சியும், வாழ்வியல் மாற்றங்களும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாது போயிருக்கும்! 

ஒவ்வொரு பயணமும் நாம் சென்று காண்கின்ற இடங்களும் நமக்குள் இருக்கும் குழந்தைமையை வெளிக் கொண்டு வருபவை! பயணிப்பதைப் போலவே பயணித்து வந்தவர்களின் அனுபவப் பகிர்வும் மிகவும் சுவாரஸ்யமாணது...அதைப் போன்ற ஒரு வாழ்வனுபவம் தான் இந்த மணல் பூத்த காடு புதினம்!

தூத்துக்குடியிலிருந்து அரபு தேசமான சவூதி அரேபியாவின் ரியாத் நோக்கி வேலைக்காக பயணப்படும் அனீஸ் தான் கதையின் நாயகன்...பயணித்தது அனீஸ் என்றாலும் நாமும் அந்த பறத்தலின் ஊடாக ஒன்றிணைந்து விடுகிறோம்! 

அரேபிய தேசம் என்றாலே நம்முடைய நினைவிற்கு வருவது வரண்ட பாலைவனமும், அந்நாட்டவர்களின் மேல் நமக்கு பதிந்திருக்கும் எதிர்மறை சிந்தனைகளும் தான்...ஆனால், இந்த புதினத்தில் சவுதியின் இன்னொரு அற்புதமான முகத்தையும், அவர் வடக்கும், தெற்கும், கிழக்கும், மேற்குமாக ஓடி ஓடி தான் ரசித்த ஒவ்வொரு இடங்களையும் தன் எழுத்துக்கள் மூலமாக வாசிப்பவர்களுக்குள் கடத்தியிருக்கிறார் அண்ணன் முஹம்மது யூசுஃப்! இதில் ஒரு கருவி மட்டுமே அனீஸ் கதாப்பாத்திரம்...

ஒவ்வொரு நாட்டிற்கும் அதனுடைய கலை, பண்பாடு, கலாச்சாரத்தின் அடிநாதம் இருக்கும் அது பயணிப்பவனின் கண்களுக்கு தன்னுடைய தரிசனத்தையும் மாண்புகளையும் திறந்து காட்டுகிறது...
ஊரில் இருந்த கடன் காரணமாக ரியாத்திற்கு பயோமெடிக்கல் எஞ்சினியர் வேலைக்கு வரும் அனீஸிற்கு அந்த நிலப்பரப்பின் குறுக்கும் நெடுக்கும் சென்று வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது...அவன் செல்லும் ஒவ்வொரு ஊரின் அருகில் இருக்கும் வரலாற்றுச் சின்னங்களையும், சிறப்பு வாய்ந்த ஊர்களையும் சுற்றிப் பார்க்கிறான்...

ஒரு பக்கம் அயல் வாழ்க்கை நிறைய பயணங்களையும் அனுபவங்களையும் தந்தாலும்...தனிமை உணர்வை போக்குபவர்கள் உடன் இருப்பவர்கள் தான் இல்லையா...அனீஸின் அறையில் உடன் தங்கியிருக்கும் இப்ராஹிம் பாய் மூலமாக அனீஸிற்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள்...அதில் முக்கியமாக ஷேக் பாய் வீட்டில் இருக்கும் ரவி, துடுக்காக பேசும் ராஜா, ஹாருன் என ஒரு நண்பர்கள் பட்டாளம் அமைகிறது...

இன்னொரு பக்கம் தோழப்பா, சரவணன் சார் என நல்ல அனுபவம் மிக்க, நல்ல மனிதர்களை சம்பாதிக்கிறான் அனீஸ்! சவுதி மண்ணின் வராலாற்றை தோழப்பா மூலம் அறிந்து கொள்ள முடிகிறது! பிரிட்டனும் பிற மேற்குலக நாடுகளும் சவுதியின் மீது தன்னுடைய ஆதிக்கத்தை எப்படி எல்லாம் நிலைநிறுத்த வேலைகளை செய்கின்றன...அதில் வஹாபிசத்தின் பங்குகள் என்ன என்பதை எல்லாம் ஒரு நல்ல ஆசிரியரின் பொறுமையோடு தோழப்பா எடுத்து கூறுகிறார்! 

முன்னுரையில் ஆசிரியர் கூறியது போல "இந்த எழுத்தை வாசித்து விட்டு சவூதி அரேபியாவுக்குச் செல்லும் வாய்ப்பை வேண்டாம் என மறுத்த, அந்த நாட்டைப் பற்றிய தவறான கருத்தை மனதில் வைத்திருந்த ஒருவன் அங்கு செல்லத் தயாரானால் நான் இதை எழுதியதன் பயன் அடைந்து விட்டதாய் கருவேன்." ஆம் நிச்சயம் நீங்கள் எழுதியதின் பயனை இந்த படைப்பு அடைந்து விட்டது! இனியும் இந்த படைப்பு நிறைய பேருக்கு சவூதியின் மேலான கண்ணோட்டத்தை மாற்றும் தகவல் களஞ்சியமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை! :)

பதிப்பகம் - யாவரும் பதிப்பகம்
பக்கங்கள் - 448
விலை - 500

Wednesday, December 2, 2020

நூல் அறிமுகம் - நஞ்சுண்ட காடு - குணா கவியழகன்

#வாசிப்பு2020

16/2020

நஞ்சுண்ட காடு - குணா கவியழகன்

இலங்கையில் 80 களில் நடந்த போரில் பங்கேற்ப்பதற்காக பயிற்சி பெற்ற இளம் பதின் வயது போராளிகளின் வாழ்வியலை விளக்குகிறது நஞ்சுண்டகாடு...அவர்களின் நஞ்சுண்டகாடு பயிற்சி முகாமில் நடக்கும் விசயங்களையும், இனியவன் மற்றும் சுகுமாறன் என்கிற இரண்டு போராளிகளுக்கு இடையில் ஏற்ப்படும் நட்பை முன்வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் குணா கவியழகன்...


பயிற்சி முகாமில் நடக்கும் சிறு சிறு சச்சரவுகள் அதற்காக அவர்களுக்கு அளிக்கப்படும் பனிஷ்மெண்ட்டுகள் என கதை போனாலும்...அங்கிருக்கும் போராளிகளின் இடையே இருந்த ஒற்றுமையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், சிறு சிறு பகடியான தருணங்களும் இல்லாமல் இல்லை...

அவர்கள் அனைவரும் பயிற்சி முடிந்து போர்களத்திற்கு போகும் போது வாசிக்கும் நமக்கும் அந்த பிரிவுணர்வு ஏற்ப்படுகிறது...அதன் பிறகாக நடக்கும் இனியவன், சுகுமாறன் சந்திப்புகளும்...சுகுமாறனின் குடும்ப நிலைமை போரின் குரூரத்தால் தாக்கப்பட்டு மிகவும் பரிதாபமான நிலையை அடைந்து துன்புருவதை சுகுமாறனின் அக்கா சொல்லும் போது  மனித வாழ்வின் துன்பியல் சக்கரம் இப்படி எல்லாம் ஒரு குடும்பத்தை அடிக்குமா என்கிற வேதனை எழுந்து ஒரு துளி கண்ணீர் துளிர்க்கிறது...அந்த இடத்தில் குணா அவரின் உணர்வுகளை வாசிப்பவரிடம் கடத்தி விடுகிறார்...

தமிழீழ போரில் பங்கேற்ற போராளிகளின் வாழ்வியலை அறிய விரும்புகிறவர்கள் இந்த புத்தகத்தை வாசிக்கலாம்...

பதிப்பகம் - கிண்டில் பதிப்பு
விலை - 99

Sunday, November 29, 2020

நூல் அறிமுகம் - விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

வாசிப்பு2020

15/2020

விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

இந்த புத்தகத்தை ரொம்ப ஆசையாய் வாங்கி வைத்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது... இந்த இரண்டு வருடத்தில் இரண்டு முறை வாசிக்க எடுத்து முதல்முறை நான்கு பதிப்புகளின் முன்னுரையை மட்டும் வாசித்து வைத்து விட்டேன்...இரண்டாம் முறை முதல் பகுதியில் இரண்டு அத்தியாயங்களுடன் நிறுத்திவிட்டேன்...


இந்த முறை விடக்கூடாது எப்படியாவது முடித்துவிட வேண்டும் என சபதம் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்...சுமார் 3 மாதங்கள் எடுத்துக் கொண்டேன் விஷ்ணுபுரத்தை வாசித்து முடிக்க...
வசந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரத்தின் கதையை சபையோர் முன்னிலையில் கூறுகிறான்...அந்த கதை சொல்லலில் விரிவான சொற்களால் கட்டமைக்கப்பட்ட நகரமே விஷ்ணுபுரம்...

இந்த நாவல் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது...

1. ஸ்ரீபாதம் 
2. கௌஸ்தூபம்
3. மணிமுடி

1. ஸ்ரீபாதம் : 

முதல் பகுதியான ஸ்ரீபாதத்தில், சோனா நதிக்கரையில், ஹரிததுங்காவின் சிகரங்களின் நிழலில் எழுந்து நிற்கும் விஷ்ணுபுர நகரத்தின் அதி அற்புதமான தோற்றமும், கோயிலின் பிரம்மாண்டமான வடிவத்தையும் நம்மால் காட்சிப்படுத்திக் கொள்ள முடிகிறது! விஷ்ணுபுர கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்ப்பங்களின் அழகையும், திருவிழாவிற்காக மக்கள் அலை அலையாக திரண்டு வரும் காட்சிகளையும் மிகவும் அழகாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்...ஒரு நாவலில் இத்தனை கதை மாந்தர்களா என வியக்கும் அளவிற்கு அவ்வளவு பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வது கொஞ்சம் சிரமமாக இருந்தது...கதையின் ஓட்டத்தில் அந்த சிரமம் நீங்கி விடுகிறது...எல்லா கதாபாத்திரங்களின் அறிமுகமும் இந்த பகுதியில் தான் நடக்கிறது...இந்த பகுதி மிகவும் வேகமாகவும் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமலும் வாசித்து முடிக்க முடிகிறது...

2. கௌஸ்தூபம்:

நாவலின் இரண்டாம் பகுதியான கௌஸ்தூபத்தில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருப்பது விஷ்ணுபுர ஞான சபையில் நடக்கும் தர்க்க விவாதங்கள் தான்...முதல் பகுதியை எளிமையாக வாசித்து முடித்திருந்தேன்...ஆனால் இந்த பகுதியில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த எத்தனையோ ஞானமரபுகளின் குருமார்கள் எல்லோரும் சேர்ந்து சர்ச்சை செய்து கொள்வதாக அமைத்திருக்கிறார் ஜெயமோகன்...இந்த ஞானசபையின் முடிவில் தான் விஷ்ணுபுரத்தின் அடுத்த தலைமைப் பீடத்தை வெற்றி கொள்ளப் போகும் ஞான மரபைத் தேர்ந்தடுப்பார்கள்...தர்க்கங்களில் பேசப்பட்ட சொல் பிரயோகங்கள் அரைகுறையாக தான் புரிந்த்து, அதனால் ஒரு நாளைக்கு 10 பக்கங்களைத் தாண்டி வாசிப்பது மிகவும் சிரமமாக இருந்தது...ஒரு நாவலுக்குள் இவ்வளவு தர்கங்களும், வாசகனைக் குழப்பும் விவாதங்களும் தேவை தானா என்கிற எண்ணம் எழாமல் இல்லை.

இந்த ஞானசபையின் முடிவில் நடக்கும் கிருஷ்ணபட்சி பரீட்சையில் வெற்றி பெற்று பௌத்த பிக்குவான அஜிதர் அடுத்த தலைமை ஸ்தானத்தை அடைகிறார்...அஜிதரின் வாதப் பிரதிவாதங்கள் அங்கே இருந்த வேதாந்திகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் பிடிக்கவில்லை...அதனால் பல சதியாலோசனைகளையும் செய்கிறார்கள், அவை அனைத்தையும் முறியடித்து பௌத்தம் விஷ்ணுபுரத்தின் தலைமை பீடத்தை அலங்கரிக்கிறது! 

3. மணிமுடி :

மகா அஜிதரின் ஆட்சியின் கீழ் விஷ்ணுபுரம் பௌத்தத்தின் ஒரு தலைநகராக விளங்குகிறது...அஜிதருக்கு முன்னர் பவதத்தரின் காலத்தில் வைணவ தலமாக இருக்கிறது...இந்த மூன்றாவது பகுதியான மணிமுடியில் விஷ்ணுபுரம் ஒரு சிதிலமடைந்த நகரமாக காட்சியளிக்கிறது...இந்த பகுதியில் தான் நகரம் பிரளையத்தில் மூழ்கி அழிகிறது...மணிமுடி பகுதியில் இங்கே குடியிருக்கும் பூர்வக் குடிகளான செம்பர் குல மக்களின் பெருமூப்பனின் சிலை தான் கருவறைக்குள் இருக்கும் விஷ்ணுவின் சிலை உருவகப்படுத்தப்படுகிறது...அவர் புறண்டு படுக்கும் காலம் தான் பிரளய காலமாக கருதப்படுகிறது...

மொத்தத்தில் விஷ்ணுபுரம் கனவில் உருவான ஒரு பிரம்மாண்ட நகரம்... ஜெயமோகன் முன்னுரையில் சொன்னது ஞாபகம் வருகிறது : "விஷ்ணுபுரம் ஒரு கனவு. கனவுகள் வசீகரமானவை. இந்நாவலின் ஈர்ப்புக்குக் காரணம் அதுவே. அதே சமயம் கனவுகளில் முற்றிலும் இனியவை என்று ஏதுமில்லை. கனவுகள் நம்மை நமக்குக் காட்டுபவை. நம்மை நிலைகுலையச் செய்பவை. நாம் நமது தர்க்கபுத்தியால் எத்தனை தூரம் சென்றாலும் எவ்வளவு சுருக்கி வகைப்படுத்தினாலும் அளந்துவிட முடியாதவை."

பிகு. : ஜெயமோகனை புதிதாக வாசிக்க விரும்புகிறவர்கள் இந்த புத்தகத்தை தவிர்த்து வேறு படைப்புகளில் இருந்து ஆரம்பிக்கலாம்...

பதிப்பகம் - கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் - 827
விலை - 800

நூல் அறிமுகம் - தோழர் சோழன் - எஸ்.எஸ். சிவசங்கர்

#வாசிப்பு2020

14/2020

தோழர் சோழன் - எஸ்.எஸ்.சிவசங்கர்

1987ஆம் ஆண்டு வாக்கில் ஆண்டிமடம், அரியலூர், ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த நக்சல் போராட்டக் குழுவின் நடவடிக்கைகளை வைத்து எழுதப்பட்ட புத்தகம் தோழர் சோழன்...உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அந்தந்த சம்பவங்களின் பத்திரிகை குறிப்புகளோடு கொடுத்திருக்கிறார்...

தனித் தமிழ்நாடு கோரிக்கைக்காக அரசின் கவனத்தை பெறுவதற்கு தோழர் தமிழரசன் தலைமையிலான நக்சல் குழு மருதையாற்று பாலத்தை தகர்ப்பதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது...

பாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட சோழன்...ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இயக்கத்தின் மேடையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்து தன்னை இணைத்துக் கொள்கிறான்...சமூகத்தில் நடக்கும் கொடுமைகள், காவல்துறையில் நடக்கும் அநியாயங்களையும் பார்க்கும் சோழன் கொத்தித்துப் போய் களம் இறங்குகிறான்! 

சிவசங்கர் கட்சி அரசியலில் இருந்தாலும் இயக்க அரசியலில் இருந்த ஒரு அமைப்பைப் பற்றி எழுதியிருப்பது, அரசியல் சார்ந்த இயக்கம் ஆட்சியில் எவ்வளவு தாக்கத்தையும், பிராந்திய ரீதியிலான பிரச்சனைகளை எவ்வாறு கையாள்கிறது என்பதை விரிவாக எழுதியிருக்கிறார்...

நிகழ்ந்த சம்பவங்களை தொகுத்திருந்தாலும் வரலாறு கூறுவது போல வறட்சியாக இல்லாமல், கதை சொல்லலை இலகுவாக செய்திருக்கிறார் ஆசிரியர்! 

பதிப்பகம் - கின்டில் பதிப்பு
பக்கங்கள் - 123
விலை - 50

Saturday, October 3, 2020

நூல் அறிமுகம் - புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

#வாசிப்பு2020

13/2020

புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகில் உள்ள பனைவிளை கிராமத்தில் இருக்கின்ற புத்தம் வீடு தான் கதைக்களம்...அந்த ஊருக்கு பிரதான தொழில் பனை, பனையை வைத்து கள், பதனீர், கருப்பட்டி என விதவிதமான பண்டங்கள் செய்து விற்பது அங்கிருக்கும் பெரும்பான்மையான மக்களின் வாழ்வியல்...


கிராமத்தில் இரண்டு பிரிவு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் ஒரு சாரார் பனை முதலாளிகள், இன்னொரு சாரார் பனையேறி தொழில் பார்க்கும் கூலியாட்கள்...ஊரின் மிகவும் பெருமை வாய்ந்த வீடான புத்தம் வீட்டின் தலைவராக கண்ணப்பச்சி இருக்கிறார் அவருக்கு இரண்டு மகன்கள் அவர்களில் மூத்த மகனின் மகள் லிஸி தான் கதையின் நாயகி...இளைய மகனின் மகள் லில்லி குறும்பும், அழகும் நிறைந்த பெண்...

கதை இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் நடந்தது...அதனால் அந்த காலத்ததின் நிலையை இயல்பாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்! புத்தம் வீடும் அதன் மனிதர்களும் எவ்வாறு சரிவை சந்திக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை இறங்குமுகமாக எப்படி போகிறது என்பதையும் காலத்தின் கட்டாயம் இந்த இரண்டு பெண்களின் வாழ்வை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை ஒரு பெண்ணின் பார்வையில் ஹெப்சிபா அழகாக கதை சொல்லியிருக்கிறார்...

குமரி வட்டார வழக்கும், கடினமில்லாத மொழியும் இயல்பாக கதையில் ஒன்றி வாசிக்க முடிகிறது!

பதிப்பகம் - காலச்சுவடு
பக்கங்கள் - 160
விலை - 190

Sunday, June 14, 2020

நூல் அறிமுகம் - ஹோமோடியஸ் வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)

#வாசிப்பு2020

11/2020

ஹோமோடியஸ் - வருங்காத்தின் சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி - தமிழில் நாகலட்சுமி சண்முகம்

ஹோமோசேப்பியன்கள் ஹோமோடியஸாக (லத்தீன் மொழியில் டியஸ் என்றால் கடவுள்) மாறக் கூடிய காலகட்டமான 21ம் நூற்றாண்டை பற்றிய தன்னுடைய பரந்துபட்ட ஆராச்சியின் கூறுகளை இந்நூல் மூலமாக முடிந்தளவு எளிமையாக்கி கொடுத்திருக்கிறார் இஸ்ரேலிய வரலாற்று அறிஞர் யுவால் நோவா ஹராரி...இவர் ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்...இவரின் முந்தைய நூலான சேப்பியன்ஸ் மனித குலத்தின் சுருக்கமான வரலாறு உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற படைப்பாகும்!

மனிதனின் மூதாதையர்களான நியண்டர்தால், சிம்பன்சிக்களில் இருந்து மனிதனின் பரிணாமம் இப்போது இருக்கும் ஹோமோசேப்பியன்ஸ் என்கிற நிலையை அடைந்திருக்கிறது...இதற்கு அடுத்த வளர்ச்சியாக ஹோமோடியஸ் என கூறக்கூடிய அதிமனிதர்களாக (Super humans) மாறுவதற்கான சாத்தியக் கூறுகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறார்.

ஹராரி வரலாற்று ஆய்வாளராக இருந்தாலும் அவர் இந்த புத்தகத்தில் அறிவியல், தொழிநுட்பம், மருத்துவம், பண்பாடு, கலை என எல்லா விதமான பரிணாமக் கூறுகளைப் பற்றியும் சுறுக்கமாக அதே சமயத்தில் சுலபமான உதாரணங்களுடன் விளக்குகிறார்!

இந்த மாறுதல் காலகட்டங்களின் ஊடாக நடைபெறவிரிக்கும் சமூக, பொருளாதார மாற்றங்களையும், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), படிமுறைத் தீர்வுகள் (Algorithms) மற்றும் Automation ஆகியவற்றால் நடக்கவிருக்கும் வேலையிழப்புகள் பற்றி கூறுகிறார்!


இப்போதிருக்கும் தொழிற்புரட்சி யுகம்  மனித மையமான ஒன்று, இதற்கு முந்தியதான உலகம் கடவுள் கொள்கை மற்றும் பல்வேறு மதப் பிரிவுகளின் ஊடகவும் இருந்து செயல்பட்டு வந்தது. ஆனால் 21ம் நூற்றாண்டு முழுக்க முழுக்க தரவுகளை (Data) மையமாக கொண்டு செயல்படும் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

எதிர்காலத்தில் இணையம் என்பது ஒரு தவிர்க்கமுடியாத மாபெரும் சக்தியாகவும் தரவோட்டத்தின் (Data Flow) அடிநாதமாகவும், மனித உழைப்பை தேவையில்லாத ஒன்றாக மாற்றவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதையும், நிகழ்காலத்தின் உதாரணங்களை வைத்து projection செய்து பார்க்கும் போது பெரும் மலைப்பு ஏற்ப்படுவதை தவிர்க்க முடியவில்லை!

தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் நாகலட்சுமி சண்முகம் அவர்கள், சிறப்பாக செய்திருக்கிறார். ஒரேஒரு சிறிய குறை தான் கலைச் சொற்கள் எல்லாவற்றையும் தமிழப்படுத்தியிருக்கத் தேவையில்லை. இந்த அதீத தமிழ்ப்படுத்துதல் வாசிப்பின் வேகத்தை மட்டுப்படுத்தி விடுகிறது!

மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் நம்முடைய சந்ததிகள் எப்படியான உலகத்தில் வாழப் போகிறார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் நிச்சயம் இந்த நூலை வாசிக்கலாம்!

"மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்த போது வரலாறு தொடங்கியது, மனிதர்களே கடவுளராக மாறும் போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்."

- யுவால் நோவா ஹராரி

பதிப்பகம் - மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
பக்கங்கள் - 504
விலை - ₹499