Sunday, November 29, 2020

நூல் அறிமுகம் - விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

வாசிப்பு2020

15/2020

விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

இந்த புத்தகத்தை ரொம்ப ஆசையாய் வாங்கி வைத்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது... இந்த இரண்டு வருடத்தில் இரண்டு முறை வாசிக்க எடுத்து முதல்முறை நான்கு பதிப்புகளின் முன்னுரையை மட்டும் வாசித்து வைத்து விட்டேன்...இரண்டாம் முறை முதல் பகுதியில் இரண்டு அத்தியாயங்களுடன் நிறுத்திவிட்டேன்...


இந்த முறை விடக்கூடாது எப்படியாவது முடித்துவிட வேண்டும் என சபதம் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்...சுமார் 3 மாதங்கள் எடுத்துக் கொண்டேன் விஷ்ணுபுரத்தை வாசித்து முடிக்க...
வசந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரத்தின் கதையை சபையோர் முன்னிலையில் கூறுகிறான்...அந்த கதை சொல்லலில் விரிவான சொற்களால் கட்டமைக்கப்பட்ட நகரமே விஷ்ணுபுரம்...

இந்த நாவல் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது...

1. ஸ்ரீபாதம் 
2. கௌஸ்தூபம்
3. மணிமுடி

1. ஸ்ரீபாதம் : 

முதல் பகுதியான ஸ்ரீபாதத்தில், சோனா நதிக்கரையில், ஹரிததுங்காவின் சிகரங்களின் நிழலில் எழுந்து நிற்கும் விஷ்ணுபுர நகரத்தின் அதி அற்புதமான தோற்றமும், கோயிலின் பிரம்மாண்டமான வடிவத்தையும் நம்மால் காட்சிப்படுத்திக் கொள்ள முடிகிறது! விஷ்ணுபுர கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்ப்பங்களின் அழகையும், திருவிழாவிற்காக மக்கள் அலை அலையாக திரண்டு வரும் காட்சிகளையும் மிகவும் அழகாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்...ஒரு நாவலில் இத்தனை கதை மாந்தர்களா என வியக்கும் அளவிற்கு அவ்வளவு பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வது கொஞ்சம் சிரமமாக இருந்தது...கதையின் ஓட்டத்தில் அந்த சிரமம் நீங்கி விடுகிறது...எல்லா கதாபாத்திரங்களின் அறிமுகமும் இந்த பகுதியில் தான் நடக்கிறது...இந்த பகுதி மிகவும் வேகமாகவும் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமலும் வாசித்து முடிக்க முடிகிறது...

2. கௌஸ்தூபம்:

நாவலின் இரண்டாம் பகுதியான கௌஸ்தூபத்தில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருப்பது விஷ்ணுபுர ஞான சபையில் நடக்கும் தர்க்க விவாதங்கள் தான்...முதல் பகுதியை எளிமையாக வாசித்து முடித்திருந்தேன்...ஆனால் இந்த பகுதியில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த எத்தனையோ ஞானமரபுகளின் குருமார்கள் எல்லோரும் சேர்ந்து சர்ச்சை செய்து கொள்வதாக அமைத்திருக்கிறார் ஜெயமோகன்...இந்த ஞானசபையின் முடிவில் தான் விஷ்ணுபுரத்தின் அடுத்த தலைமைப் பீடத்தை வெற்றி கொள்ளப் போகும் ஞான மரபைத் தேர்ந்தடுப்பார்கள்...தர்க்கங்களில் பேசப்பட்ட சொல் பிரயோகங்கள் அரைகுறையாக தான் புரிந்த்து, அதனால் ஒரு நாளைக்கு 10 பக்கங்களைத் தாண்டி வாசிப்பது மிகவும் சிரமமாக இருந்தது...ஒரு நாவலுக்குள் இவ்வளவு தர்கங்களும், வாசகனைக் குழப்பும் விவாதங்களும் தேவை தானா என்கிற எண்ணம் எழாமல் இல்லை.

இந்த ஞானசபையின் முடிவில் நடக்கும் கிருஷ்ணபட்சி பரீட்சையில் வெற்றி பெற்று பௌத்த பிக்குவான அஜிதர் அடுத்த தலைமை ஸ்தானத்தை அடைகிறார்...அஜிதரின் வாதப் பிரதிவாதங்கள் அங்கே இருந்த வேதாந்திகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் பிடிக்கவில்லை...அதனால் பல சதியாலோசனைகளையும் செய்கிறார்கள், அவை அனைத்தையும் முறியடித்து பௌத்தம் விஷ்ணுபுரத்தின் தலைமை பீடத்தை அலங்கரிக்கிறது! 

3. மணிமுடி :

மகா அஜிதரின் ஆட்சியின் கீழ் விஷ்ணுபுரம் பௌத்தத்தின் ஒரு தலைநகராக விளங்குகிறது...அஜிதருக்கு முன்னர் பவதத்தரின் காலத்தில் வைணவ தலமாக இருக்கிறது...இந்த மூன்றாவது பகுதியான மணிமுடியில் விஷ்ணுபுரம் ஒரு சிதிலமடைந்த நகரமாக காட்சியளிக்கிறது...இந்த பகுதியில் தான் நகரம் பிரளையத்தில் மூழ்கி அழிகிறது...மணிமுடி பகுதியில் இங்கே குடியிருக்கும் பூர்வக் குடிகளான செம்பர் குல மக்களின் பெருமூப்பனின் சிலை தான் கருவறைக்குள் இருக்கும் விஷ்ணுவின் சிலை உருவகப்படுத்தப்படுகிறது...அவர் புறண்டு படுக்கும் காலம் தான் பிரளய காலமாக கருதப்படுகிறது...

மொத்தத்தில் விஷ்ணுபுரம் கனவில் உருவான ஒரு பிரம்மாண்ட நகரம்... ஜெயமோகன் முன்னுரையில் சொன்னது ஞாபகம் வருகிறது : "விஷ்ணுபுரம் ஒரு கனவு. கனவுகள் வசீகரமானவை. இந்நாவலின் ஈர்ப்புக்குக் காரணம் அதுவே. அதே சமயம் கனவுகளில் முற்றிலும் இனியவை என்று ஏதுமில்லை. கனவுகள் நம்மை நமக்குக் காட்டுபவை. நம்மை நிலைகுலையச் செய்பவை. நாம் நமது தர்க்கபுத்தியால் எத்தனை தூரம் சென்றாலும் எவ்வளவு சுருக்கி வகைப்படுத்தினாலும் அளந்துவிட முடியாதவை."

பிகு. : ஜெயமோகனை புதிதாக வாசிக்க விரும்புகிறவர்கள் இந்த புத்தகத்தை தவிர்த்து வேறு படைப்புகளில் இருந்து ஆரம்பிக்கலாம்...

பதிப்பகம் - கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் - 827
விலை - 800

நூல் அறிமுகம் - தோழர் சோழன் - எஸ்.எஸ். சிவசங்கர்

#வாசிப்பு2020

14/2020

தோழர் சோழன் - எஸ்.எஸ்.சிவசங்கர்

1987ஆம் ஆண்டு வாக்கில் ஆண்டிமடம், அரியலூர், ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த நக்சல் போராட்டக் குழுவின் நடவடிக்கைகளை வைத்து எழுதப்பட்ட புத்தகம் தோழர் சோழன்...உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அந்தந்த சம்பவங்களின் பத்திரிகை குறிப்புகளோடு கொடுத்திருக்கிறார்...

தனித் தமிழ்நாடு கோரிக்கைக்காக அரசின் கவனத்தை பெறுவதற்கு தோழர் தமிழரசன் தலைமையிலான நக்சல் குழு மருதையாற்று பாலத்தை தகர்ப்பதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது...

பாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட சோழன்...ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இயக்கத்தின் மேடையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்து தன்னை இணைத்துக் கொள்கிறான்...சமூகத்தில் நடக்கும் கொடுமைகள், காவல்துறையில் நடக்கும் அநியாயங்களையும் பார்க்கும் சோழன் கொத்தித்துப் போய் களம் இறங்குகிறான்! 

சிவசங்கர் கட்சி அரசியலில் இருந்தாலும் இயக்க அரசியலில் இருந்த ஒரு அமைப்பைப் பற்றி எழுதியிருப்பது, அரசியல் சார்ந்த இயக்கம் ஆட்சியில் எவ்வளவு தாக்கத்தையும், பிராந்திய ரீதியிலான பிரச்சனைகளை எவ்வாறு கையாள்கிறது என்பதை விரிவாக எழுதியிருக்கிறார்...

நிகழ்ந்த சம்பவங்களை தொகுத்திருந்தாலும் வரலாறு கூறுவது போல வறட்சியாக இல்லாமல், கதை சொல்லலை இலகுவாக செய்திருக்கிறார் ஆசிரியர்! 

பதிப்பகம் - கின்டில் பதிப்பு
பக்கங்கள் - 123
விலை - 50

Saturday, October 3, 2020

நூல் அறிமுகம் - புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

#வாசிப்பு2020

13/2020

புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகில் உள்ள பனைவிளை கிராமத்தில் இருக்கின்ற புத்தம் வீடு தான் கதைக்களம்...அந்த ஊருக்கு பிரதான தொழில் பனை, பனையை வைத்து கள், பதனீர், கருப்பட்டி என விதவிதமான பண்டங்கள் செய்து விற்பது அங்கிருக்கும் பெரும்பான்மையான மக்களின் வாழ்வியல்...


கிராமத்தில் இரண்டு பிரிவு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் ஒரு சாரார் பனை முதலாளிகள், இன்னொரு சாரார் பனையேறி தொழில் பார்க்கும் கூலியாட்கள்...ஊரின் மிகவும் பெருமை வாய்ந்த வீடான புத்தம் வீட்டின் தலைவராக கண்ணப்பச்சி இருக்கிறார் அவருக்கு இரண்டு மகன்கள் அவர்களில் மூத்த மகனின் மகள் லிஸி தான் கதையின் நாயகி...இளைய மகனின் மகள் லில்லி குறும்பும், அழகும் நிறைந்த பெண்...

கதை இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் நடந்தது...அதனால் அந்த காலத்ததின் நிலையை இயல்பாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்! புத்தம் வீடும் அதன் மனிதர்களும் எவ்வாறு சரிவை சந்திக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை இறங்குமுகமாக எப்படி போகிறது என்பதையும் காலத்தின் கட்டாயம் இந்த இரண்டு பெண்களின் வாழ்வை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை ஒரு பெண்ணின் பார்வையில் ஹெப்சிபா அழகாக கதை சொல்லியிருக்கிறார்...

குமரி வட்டார வழக்கும், கடினமில்லாத மொழியும் இயல்பாக கதையில் ஒன்றி வாசிக்க முடிகிறது!

பதிப்பகம் - காலச்சுவடு
பக்கங்கள் - 160
விலை - 190

Sunday, June 14, 2020

நூல் அறிமுகம் - ஹோமோடியஸ் வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)

#வாசிப்பு2020

11/2020

ஹோமோடியஸ் - வருங்காத்தின் சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி - தமிழில் நாகலட்சுமி சண்முகம்

ஹோமோசேப்பியன்கள் ஹோமோடியஸாக (லத்தீன் மொழியில் டியஸ் என்றால் கடவுள்) மாறக் கூடிய காலகட்டமான 21ம் நூற்றாண்டை பற்றிய தன்னுடைய பரந்துபட்ட ஆராச்சியின் கூறுகளை இந்நூல் மூலமாக முடிந்தளவு எளிமையாக்கி கொடுத்திருக்கிறார் இஸ்ரேலிய வரலாற்று அறிஞர் யுவால் நோவா ஹராரி...இவர் ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்...இவரின் முந்தைய நூலான சேப்பியன்ஸ் மனித குலத்தின் சுருக்கமான வரலாறு உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற படைப்பாகும்!

மனிதனின் மூதாதையர்களான நியண்டர்தால், சிம்பன்சிக்களில் இருந்து மனிதனின் பரிணாமம் இப்போது இருக்கும் ஹோமோசேப்பியன்ஸ் என்கிற நிலையை அடைந்திருக்கிறது...இதற்கு அடுத்த வளர்ச்சியாக ஹோமோடியஸ் என கூறக்கூடிய அதிமனிதர்களாக (Super humans) மாறுவதற்கான சாத்தியக் கூறுகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறார்.

ஹராரி வரலாற்று ஆய்வாளராக இருந்தாலும் அவர் இந்த புத்தகத்தில் அறிவியல், தொழிநுட்பம், மருத்துவம், பண்பாடு, கலை என எல்லா விதமான பரிணாமக் கூறுகளைப் பற்றியும் சுறுக்கமாக அதே சமயத்தில் சுலபமான உதாரணங்களுடன் விளக்குகிறார்!

இந்த மாறுதல் காலகட்டங்களின் ஊடாக நடைபெறவிரிக்கும் சமூக, பொருளாதார மாற்றங்களையும், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), படிமுறைத் தீர்வுகள் (Algorithms) மற்றும் Automation ஆகியவற்றால் நடக்கவிருக்கும் வேலையிழப்புகள் பற்றி கூறுகிறார்!


இப்போதிருக்கும் தொழிற்புரட்சி யுகம்  மனித மையமான ஒன்று, இதற்கு முந்தியதான உலகம் கடவுள் கொள்கை மற்றும் பல்வேறு மதப் பிரிவுகளின் ஊடகவும் இருந்து செயல்பட்டு வந்தது. ஆனால் 21ம் நூற்றாண்டு முழுக்க முழுக்க தரவுகளை (Data) மையமாக கொண்டு செயல்படும் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

எதிர்காலத்தில் இணையம் என்பது ஒரு தவிர்க்கமுடியாத மாபெரும் சக்தியாகவும் தரவோட்டத்தின் (Data Flow) அடிநாதமாகவும், மனித உழைப்பை தேவையில்லாத ஒன்றாக மாற்றவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதையும், நிகழ்காலத்தின் உதாரணங்களை வைத்து projection செய்து பார்க்கும் போது பெரும் மலைப்பு ஏற்ப்படுவதை தவிர்க்க முடியவில்லை!

தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் நாகலட்சுமி சண்முகம் அவர்கள், சிறப்பாக செய்திருக்கிறார். ஒரேஒரு சிறிய குறை தான் கலைச் சொற்கள் எல்லாவற்றையும் தமிழப்படுத்தியிருக்கத் தேவையில்லை. இந்த அதீத தமிழ்ப்படுத்துதல் வாசிப்பின் வேகத்தை மட்டுப்படுத்தி விடுகிறது!

மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் நம்முடைய சந்ததிகள் எப்படியான உலகத்தில் வாழப் போகிறார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் நிச்சயம் இந்த நூலை வாசிக்கலாம்!

"மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்த போது வரலாறு தொடங்கியது, மனிதர்களே கடவுளராக மாறும் போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்."

- யுவால் நோவா ஹராரி

பதிப்பகம் - மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
பக்கங்கள் - 504
விலை - ₹499

Friday, June 12, 2020

நூல் அறிமுகம் - ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி

#வாசிப்பு2020

10/2020

ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி

18 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் கொண்ட தொகுப்பு, பழ. அதியமான் தொகுத்திருக்கிறார். கரிசல் நிலத்தின் கதை சொல்லியான அழகிரிசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன் அவர்கள் பிறந்த இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர்.

கரிசல் நிலத்திலிருந்து எழுத வந்திருந்தாலும் ஒருசில கதைகளைத் தவிர மற்றவை எல்லாம் சென்னையின் மைலாப்பூர், திருவல்லிக்கேணி என சென்னையின் அறுபதுகளின் வாழ்நிலை கதைகளில் பிரதிபலிக்கிறது...
கதாபாத்திரங்கள் எல்லோரும் ஏழை மற்றும் நடுத்தர குடுத்து ஆட்களாகவே இருக்கிறார்கள். அநேக கதைகளில் பசி என்பதை மையச் சரடாக பயன்படுத்தியிருக்கிறார் அழகிரிசாமி.  

குடும்ப வாழ்க்கை, மனிதர்களின் மன அவசம், பலவீனங்கள், குழந்தைகளின் உலகம், மனிதனின் சிறுமை எண்ணங்கள் என பல்வேறு தளங்களில் எளிமையான நடையில் சித்தரிப்பின் லாவகத்தோடும், உள்ளோடும் துயர இழையுடனும், நகைச்சுவையோடும்,  வாசகனுக்கு சலிப்பில்லாமலும் ஒரு Feel good தொகுப்பாக இருக்கிறது ராஜா வந்திருக்கிறார்! 

பதிப்பகம் - காலச்சுவடு
பக்கங்கள் - 270
விலை - ₹300

நூல் அறிமுகம் - தாய் - மாக்சிம் கார்க்கி (தமிழில் தொ.மு.சி.ரகுநாதன்)

#வாசிப்பு2020

9/2020

தாய் - மாக்சிம் கார்கி
தமிழில் - தொ.மு.சி ரகுநாதன்

ரஷ்ய நாட்டின் ஒரு தொழிலாளர் குடியிருப்பில் இருக்கும் ஒரு குடிகாரத் தொழிலாளியின் மனைவியான பெலகேயா நிலாவ்னா மற்றும் அவளது மகன் பாவெல் விலாவிச்... பாவெல்லின் அப்பா இறந்த பிறகு அவனுடைய நடவடிக்கைகளில் நிகழ்ந்த மாற்றங்களை பயத்துடன் கண்ணுற்று துயர் கொள்கிறாள் தாய் பெலகேயா...

மகனின் போக்கு அரசிற்கு எதிராகவும், ஜார் மன்னின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும் இருப்பதை கண்டு மிகவும் மன வருத்தத்திற்கு உள்ளாகிறாள்...சில நாட்களுக்கு பிறகு புதிய மனிதர்கள் சிலர் பாவெல்லை பார்த்து விவாதிப்பற்காக அவர்களின் வீட்டிற்கு வருகிறார்கள்...

நிறைய புத்தகங்களை வாசித்து புரட்சிக்கான திடமுடையவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள நிறைய விவாதங்களை மேற்க்கொள்கிறார்கள்...இந்த விவாதங்களை கவனித்த தாய்க்கு தன்னுடைய மகன் ஒரு ஞாயமான விசயங்களுக்காக தான் போராட ஆயத்தமாகிறான் என்கிற விசயம் பிடிபடுகிறது...
கொஞ்சம் கொஞ்சமாக தாயும், பாவெல் மற்றும் அவனது தோழர்களின் கொள்கைகளின் பால் ஈர்க்கப்படுகிறாள்...ஒரு கட்டத்தில் பாவெலும் அவனது தோழர்களும் கைது செய்யப்பட தாயை நகரத்தில் இருக்கும் தோழன் நிகலாய் இவனோவிச்சின் வீட்டிற்கு கூட்டிச் சென்று தங்க வைத்துக் கொள்கிறான்...அங்கே இன்னும் நிறைய தோழர்களுடைய அறிமுகம் கிடைக்கிறது...தாய் தன்னை இயக்கத்தின் முழுமையான பணிகளில் தன்னை முழுவது ஈடுபடுத்திக் கொள்கிறாள்...

அதே நேரத்தில் ரஷ்ய மக்கள் வாசிப்பில் எவ்வளவு ஆர்வம் கொண்டவர்கள் என்பதை இந்த நாவலின் மூலம் அறிய முடிகிறது...மாபெரும் புரட்சிகள் அனைத்தும் தூண்டப்படுவதற்கு எழுத்து எவ்வளவு உதவிகரமான கருவியாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நூல் உணர்த்துகிறது! 

ஒவ்வொரு நாட்களும் புரட்சிகர கருத்துக்களின் தாக்கத்தால் ஆட்கொள்ளப்படுகிற பெலகேயா நிலாவ்னா என்ன மாதிரியான மனப் போக்குகளுக்கு ஆளாகிறாள் என்பதை கார்க்கி எழுத்தின் ஊடாக உணர்த்துகிறார்...புரட்சி என்பது முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய விசயம் என்பதை உணர முடிகிறது...தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் ஆண்களை விட பெண்கள் இன்னும் உத்வேகத்துடன் உண்மைக்கான குரலாக ஒலிப்பார்கள் என்பதை கதையில் வரும் பெலகேயா நிலாவ்னா, சோபியா, சாஷா பொன்ற நிறைய கதாப்பாத்திரங்கள் வெளிப்படுத்துகின்றனர்...

நான் வாசித்தது NCBH இன் பதிப்பு...மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தாலும்...புத்தகத்தின் பிழைத் திருத்தம் சரியாக செய்யப்படவில்லை...ஒரு சில பக்கங்களை எல்லாம் வாசிக்கையில் யார் பேசுறார்...யார் பதில் சொல்கிறார் என்று குழப்பம் வருகிறது அளவிற்கு ஆண்பால் பெண்பால் குறிப்புகளிலேயே நிறைய பிழைகளை காண முடிகிறது...

காலங்கள் மாறலாம் ஆனால் காட்சிகள் இன்னும் அதே மாதிரி தான் இருக்கிறது என்பதை உலகின் பல மூலைகளில் நடக்கும் அடக்குமுறை, பாசிச வெறி, தொழிலாளர்கள் சுரண்டல் என்கிற புள்ளியில் இருந்து பார்க்கும் போது தாய் எல்லா காலத்துக்கும் பொருந்துகின்ற ஒரு உலகப்படைப்பு என்பதில் எந்த ஐய்யமும் இன்றி நிரூபணம் ஆகிறது! 

பதிப்பகம் - NCBH
பக்கங்கள் - 534
விலை - ₹350

நூல் அறிமுகம் - மிஷன் தெரு - தஞ்சை ப்ரகாஷ்

#வாசிப்பு2020

8/2020

மிஷன் தெரு - தஞ்சை ப்ரகாஷ்

சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் மன்னார்குடி மற்றும் தஞ்சை மாநகரில் வாழந்த கிருஸ்துவ கள்ளர் குடும்பத்துப் பெண்ணான எஸ்தரின் வாழ்கையின் ஊடாக அந்த காலத்தில் நிலவிய சாதிய முறையை பற்றியும், மக்களின் வாழ்வியல் முறையும், கிறிஸ்துவ மதம் மாறிய மக்களின் வாழ் நிலையையும்...முக்கியமாக பெண்களின்  நிலையையும் ஒரு குறுக்கு வெட்டுத் தொற்றமாக எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் ப்ரகாஷ்...

நிறைய கனவுகளுடனும், ஆசைகளுடனும் மன்னார்குடியில் 15 வயது நிரம்பிய தைரியமான, ஆங்கிலப் புலமை, இசை ஞானம்,  சமத்துவ சமுதாயத்தில் நம்பிக்கையுள்ள பெண்ணாக வலம் வருகிறாள் எஸ்தர்...அந்த காலகட்டத்தில் 15 வயதில் ஒன்று வீட்டில் விதவையாக இருப்பார்கள் அல்லது கணவன் வீட்டில் இருப்பார்கள்... ஆனால் எஸ்தர் மட்டும் அதில் விதிவிலக்காக இருந்தாள்...
வாழ்வில் எஸ்தர் எடுத்த ஒரு தவறான முடிவினால் இடையில் லாசரஸ் என்னும் ஒருவனின் வலையில் மாட்டிக் கொண்டு திருமண பந்தத்தில் வலுக்கட்டாயமாக நுழைத்தனுப்பப்படுகிறாள்...

அதன் பிறகு அவளின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை ப்ரகாஷ் தன் இயல்பான எழுத்து நடையில் தொய்வின்றி எழுதியிருக்கிறார்! 

18ம் நூற்றாண்டின் அரசியல், சமூக நிலைப்பாடுகள், தஞ்சை மாகாணத்தில் சரபோஜி மன்னர்களின் இக்கட்டான சூழல் என அன்றைய காலகட்டத்தையும் கதைக்கு இயைந்தாற்போல பயன்படுத்தியிருக்கிறார்! 

பதிப்பகம் - வாசகசாலை பதிப்பகம்
பக்கங்கள் - 110
விலை - ₹120